வங்கி கடன் மோசடி வழக்கு.. 4-வது முறையாக லண்டன் நீதிமன்றத்தில் தள்ளுபடியான நீரவ் ஜாமின் மனு
லண்டன்: பிரபல இந்திய தொழிலதிபரும், வைர வியாபாரியுமான நீரவ் மோடியின் ஜாமின் மனுவை, லண்டன் நீதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது.
வங்கி கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடியின் ஜாமின் மனு, தொடர்ந்து 4-வது முறையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. குஜராத்தை சேர்ந்தவர் பிரபல வைர வியாபாரி 48 வயதான நீரவ் மோடி.
மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்றிருந்தார். இதனை முறையாக திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி வந்த நீரவ், ஒரு கட்டத்தில் வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டார்.
இதனையடுத்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த மோசடி குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்தியாவில் உள்ள நீரவ் மோடியின் பல்வேறு சொத்துகளும் முடக்கப்பட்டன.
அவர் எங்கே சென்றார் என்பதே தெரியாமல் இருந்த நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் நீரவ் மோடி சுதந்திரமாக உலா வருவதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக வீடியோ ஒன்றும் வெளியானது.
பல்லாயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதனை திரும்ப கொடுக்காமல் தப்பியதோடு மட்டுமல்லாமல், லண்டனில் நீரவ் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருவது தெரிய வந்ததால் இந்தியாவில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இந்திய அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்ற, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம், நீரவ் மோடிக்கு எதிராக கைது ஆணை பிறப்பித்தது.
இதனையடுத்து விரைந்து கைது செய்ய்பட்ட நீரவ் மோடி, தற்போது லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நீரவ் மோடியின் ஜாமின் ஏற்கனவே மூன்று முறை தள்ளுபடியான நிலையில, நான்காவது முறையாக சமீபத்தில் மீண்டும் விசாரிக்கப்பட்டது.
அப்போது வாதிட்ட பிரிட்டன் அரசு தரப்பு நீரவ் மோடியை ஜாமினில் விட்டால் சாட்சிகளை மிரட்டுவார், சரணடைய மாட்டார் என்று கூறப்பட்டது. இதனை மறுத்த நீரவ் மோடி தரப்பு வழக்கறிஞர் லண்டனை விட அவருக்கு பாதுகாப்பான இடம் வேறு கிடையாது. எனவே அவர் எங்கும் தப்பி செல்ல மாட்டார் என கூறினார். விசாரணை முடிந்த நிலையில் ஜாமின் மனு மீதான தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது.
தொடர்ந்து 4வது முறையாக நீரவ் மோடியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது . 84 நாட்களுக்கும் மேலாக லண்டன் சிறையில் உள்ள நீரவ் தற்போதாவது தமக்கு ஜாமின் கிடைத்துவிடும் என காத்திருந்தார். ஆனால் அவரை விடுவிப்பதில்லை என்ற தீர்மானத்தோடு இருக்கிறது போலும் லண்டன் நீதிமன்றம்