லண்டனில் 5 அடி மட்டுமே அகலமுள்ள மிகக் குறுகிய வீடு... ரூ. 9.5 கோடிக்கு விற்பனை
லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருக்கும் ஐந்கு அடி மட்டுமே அகலமுள்ள குடியிருப்பு தற்போது சுமார் 9.50 பவுண்டுக்கு (இந்திய மதிப்பில் 9.5 கோடி ரூபாய்) விற்பனைக்கு வந்துள்ளது.
பொதுவாக அனைத்து நாடுகளிலும் வீடுகளுக்கான சந்தை என்பது அதிக போட்டி நிறைந்தவை. அதிலும் குறிப்பாக உலகின் முன்னணி நகரங்களில் விண்ணை முட்டும் விலைக்கே வீடுகள் விற்பனை செய்யப்படுகிறது.
ஐரோப்பியாவில் முக்கிய நாடுகளில் ஒன்றான பிரிட்டன் நாட்டில் வீடுகள் மிகவும் அதிக விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. தீவு நாடாக இருப்பதால் ஒரு கட்டத்திற்கு மேல் புதிய வீடுகளைக் கட்ட முடியாத சூழ்நிலை, அங்கு ஏற்படும். இதன் காரணமாக அங்குள்ள வீடுகள் மிகவும் அதிக விற்கப்படுகிறது.
மிகக் குறுகிய வீடு
இந்நிலையில், லண்டன் நகரில் அமைந்துள்ள மிகச் சிறிய வீடுதான் தற்போது தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றுள்ளது. வெறும் 5.6 அடிகள் மட்டுமே அகலமுள்ள இந்த ஐந்து மாடி குடியிருப்பு தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. லண்டன் நகரிலேயே மிகக் குறுகிய வீடான இந்த வீட்டின் விலை 9.50 பவுண்டாக (இந்திய மதிப்பில் 9.5 கோடி ரூபாய்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மிகக் குறுகிய இந்த வீடு கணவனும் மனைவியும் வாழ சரியாக இருக்கும் என்று வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
தொப்பி கடை
இந்த அசாதாரண வீட்டில் முதலில் ஒரு விக்டோரியன் தொப்பி கடை இயங்கிவந்தது. தரைதளத்தில் கடை அமைந்திருந்தது. வீட்டின் மேல் தளங்கள் பொருட்கள் சேமிக்கவும் ஊழியர்கள் தங்கவும் பயன்படுத்தப்பட்டது. இந்த வீடு 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டது. வீட்டின் முகப்பு மட்டுமே 5.6 அடி என குறுகலாக உள்ளது. வீட்டின் உள்ளே செல்ல செல்ல வீடு சற்று அகலமாகவே இருக்கும் என்றும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
தனித்துவமான வீடு
லண்டன் நகரில் பொதுவாக வீடுகள் 2.56 லட்சம் பவுண்டுகளுக்கே விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்த வீடு அதைவிட மல மடங்கு அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது. நகரின் மையப் பகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ளதாலும், இது மிகவும் தனித்துவமான வீடு என்பதாலும் இந்த வீட்டின் விலை மிக அதிகமாக உள்ளதாக வீட்டை விற்பனை செய்யும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிறுவனத்தின் மேலாளர் தெரிவித்துள்ளார்.
விற்பனை ஆவது சிரமம்
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "2006ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வீட்டின் மதிப்பு இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. இருப்பினும், இது போன்ற தனித்துவமான பொருட்களையும் இடங்களையும் வாங்க மிகச் சிலரே ஆர்வம் காட்டுவார்கள் என்பதால் இந்த வீடு இதுவரை விற்பனையாகவில்லை. அதுவும் இந்த கொரோனா காலகட்டத்தில் அனைவரும் பண நெருக்கடியில் உள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது நகரின் வெளியில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க அதிக முனைப்புக் காட்டுகின்றனர்" என்றார்.