‘நீ பற்ற வைத்த நெருப்பொன்று’.. வித்தியாசமாக காதலைச் சொல்ல நினைத்து பல்பு வாங்கிய இளைஞர்!
இங்கிலாந்தில் வித்தியாசமாகக் காதலைச் சொல்ல நினைத்து வீட்டையே கொளுத்தியுள்ளார் இளைஞர் ஒருவர்.
லண்டன்: இந்த உலகம் எத்தனையோ விதமான காதல் புரொபோஷல்களைப் பார்த்திருக்கும். ஆனால் வாழ்க்கையை ஒளிமயமாகத் தொடங்க வேண்டும் என்ற ஆசையில் வீட்டையே கொளுத்திய இந்த இளைஞரின் காதல் கதையை நினைத்து சிரிப்பதா அல்லது அழுவதா என்றே தெரியவில்லை.
இங்கிலாந்திலுள்ள சவுத் யார்ஷயார் பகுதியைச் சேர்ந்தவர் அந்த இளைஞர். சம்பவத்தன்று தன் காதலியிடம் வித்தியாசமாக தனது காதலை வெளிப்படுத்த திட்டமிட்டிருக்கிறார். எனவே நூற்றுக்கும் மேற்பட்ட மெழுகுவர்த்திகளை வீடு முழுவதும் ஏற்றி வைத்திருக்கிறார். அதோடு காதலிக்கு சர்ப்பிரைஸ்க்கு மேல் சர்ப்பிரைஸ் தர நினைத்த அவர், கிளாஸில் மதுவும் ஊற்றி வைத்து, அழகிய பலூன்களால் வீட்டை அழகு படுத்தியுள்ளார்.
கொரோனா பொது முடக்கம்...மக்கள் என்ன அதிகமாக வாங்கினர்...இவற்றுக்கு மவுசு அதிகம்!!
அனைத்து ஏற்பாடுகளும் முடிந்தபின் காதலியை அழைத்து வர வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியில் சென்று விட்டார் அவர். பின்னர் காதலியுடன் சிறிது நேரத்திற்குப் பிறகு வீடு திரும்பியிருக்கிறார். அப்போது அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்த அவரது வீடு தீக்கிரையாகி அலங்கோலமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியாகி விட்டார்.
அழகுக்காக அவர் ஏற்றி வைத்திருந்த மெழுகுவர்த்திகள் கீழே சாய்ந்ததில் அவரது வீட்டு பற்றி எரிந்திருக்கிறது. இதைப் பார்த்து அவரது காதலியும் அதிர்ச்சி அடைந்து விட்டார். வீட்டில் பற்றி எரிந்த தீயை மூன்று வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்துள்ளனர்.
ஏதேதோ கனவுகளுடன் தன் வாழ்க்கையைத் தொடங்க நினைத்த அந்த இளைஞருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை புகைப்படத்துடன் அந்நாட்டு தீயணைப்புத் துறை தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இன்ப அதிர்ச்சி தருவதற்காக இப்படியான விபரீத செயல்களில் ஈடுபடக் கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தப் புகைப்படங்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட அந்த இளைஞர் மற்றும் அவரது காதலியின் பெயரை அவர்கள் வெளியிடவில்லை.
நல்லவேளையாக இந்த தீவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதோடு, இவ்வளவு பிரச்சினையிலும் அந்த இளைஞருக்கு ஒரு சந்தோசமான செய்தியும் கிடைத்துள்ளது. ஆம், தனக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்து இவ்வளவு ஏற்பாடுகள் செய்த அந்த இளைஞரின் காதலுக்கு சம்மதம் கூறி விட்டார் அவரது காதலி. சினிமா மாதிரி அவரது காதல் கதையும் சுபமாக முடிந்து விட்டது.