அதிக பாதிப்பை ஏற்படுத்தும் உருமாறிய கொரோனா... அடுத்தாண்டு உயிரிழப்பு பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு
லண்டன்: உருமாறிய கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவுவதால் அடுத்தாண்டு கொரோனா உயிரிழப்புகள் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ள ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகெங்கும் கொரோனா வைரசின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1.93 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல பிரேசிலில் சுமார் 59 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளிலும் ஃபைசர், மாடர்னா உள்ளிட்ட ஏதேனும் ஒரு கொரோனா தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்து அளிக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
உருமாறிய கொரோனா
இந்தச் சூழ்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் கடந்த சில வாரங்களாகப் பிரிட்டனில் கொரோனா தொற்று திடீரென்று அதிகரிக்கத் தொடங்கியது. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் புதிய வகை கொரோனா வைரஸை கண்டறிந்தனர். மேலும், இந்தப் புதிய வகை கொரோனா மற்ற வகைகளைவிட வேகமாகப் பரவுவதாகவும் எச்சரித்தனர்.
உயிரிழப்புகள் அதிகரிக்கும்
இந்நிலையில், இந்த உருமாறிய கொரோனா வைரஸ் தொடர்பாகப் பல புதிய தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசைவிட இந்தப் புதிய வகை கொரோனா 56% வேகமாகப் பரவும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், இந்தப் புதிய வகை கடந்த நவம்பர் மாதம் தென்கிழக்கு இங்கிலாந்தில் முதலில் தோன்றியிருக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். வேகமாகப் பரவி வரும் இந்த உருமாறிய கொரோனா, அடுத்தாண்டு கொரோனா காரணமாக நோயாளிகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவதையும் உயிரிழப்புகளையும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் தெரித்துள்ளனர்.
தீவிரமானதா என்று தெரியவில்லை
மேலும், "இந்த உருமாறிய கொரோனா வைரஸ் முன்பு கண்டறியப்பட்ட வகைகளைவிட அதிக ஆபத்தானதா அல்லது குறைந்த ஆபத்தானதா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. ஆயினும்கூட, உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதால் இது பாதிப்பை அதிகப்படுத்தும், 2020ஆம் ஆண்டில் காணப்பட்டதைவிட 2021ஆம் ஆண்டில் உயிரிழப்பும் பாதிப்பும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும்
உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது பிரிட்டனில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் ஆரம்ப பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மூடப்படாவிட்டால் நோய்த்தொற்று அதிகரிப்பதைத் தடுக்க வாய்ப்பில்லை என்று ஆசிரியர்கள் எச்சரித்தனர்.
தடுப்பு மருந்து மட்டுமே ஒரே வழி
இதுவரை உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்துகள் இந்த உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக வேலை செய்யுமா என்ற அச்சமும் மக்களிடையே நிலவியது. ஆனால் மாடர்னா நிறுவனம், இந்தப் புதிய வகை கொரோனாவுக்கு எதிராகவும் தங்கள் தடுப்பு மருந்து வேலை செய்யும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது. மேலும், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்து விநியோகத்தைத் தீவிரப்படுத்துவது மட்டுமே ஒரே வழி என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.