தடுப்பு மருந்தில் இருந்து தப்பிக்கவே கொரோனா தன்னை மாற்றிக் கொள்கிறது... பகிர் தகவல்
லண்டன்: தற்போது உருவாக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகளின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கொரோனா எடுத்துள்ள முயற்சியே இந்த புதிய வகை என்று எச்சரித்துள்ளார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் ரவீந்திர குப்தா.
பிரிட்டனில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை திடீரென்று பல மடங்கு அதிகரித்தது. இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் நடத்திய சோதனையில் கொரோனா தன்னை புதிய வகையில் புதுப்பித்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இந்த புதிய வகை கொரோனா மற்ற வகைகளைவிட 70 சதவிகிதம் வேகமாகப் பரவுவதாகவும் கூறப்பட்டிருந்தது தற்போது உருவாக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகளின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கொரோனா எடுத்துள்ள முயற்சியே இது என்று எச்சரித்துள்ளார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் ரவீந்திர குப்தா.
தன்னை தானே மாற்றி
இது குறித்து பிபிசி செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "தடுப்பு மருந்தில் இருந்து தப்பித்துக் கொள்ள வைரஸ் இதுபோல தன்னைத் தானே மாற்றிக்கொள்கிறது. இதன் மூலம் தடுப்பு மருந்தால் அழிக்க முடியாமல் மக்களைத் தொடர்ந்து வைரஸ் பாதிக்கிறது.
கவலை கொள்ளும் அரசு
இதுதான் இந்த வைரசில் மிகவும் அபாயமானது. வைரஸ் தன்னை தானே தொடர்ந்து மாற்றிக்கொண்டு நம்மைத் தொடர்ந்து பாதிக்கும் என்பதற்கான சமீபத்திய உதாரணமே இது. இந்த புதிய வகை மிக வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாகவே அரசும் ஆராய்ச்சியாளர்களும் கவலை கொண்டுள்ளனர்" என்றார்.
மருந்து வேலை செய்யுமா?
வேகமாகப் பரவும் இந்த புதிய வகை கொரோனாவுக்கு எதிராக ஃபைஸர் உள்ளிட்ட நிறுவனங்களின் கொரோனா தடுப்பு மருந்து வேலை செய்யுமா என்பதே தற்போது பலரது கேள்வியாக உள்ளது. ஏனென்றால், இந்த தடுப்பு மருந்துகள் பழைய வகை கொரோனா வகைகளை வைத்துக்கொண்டு உருவாக்கப்பட்டவை.
இது குறித்து ரவீந்திர குப்தா கூறுகையில், "ஆம், வேலை செய்யும். இந்த தடுப்பு மருந்துகள் ஒரு வைரசின் பல்வேறு மண்டலங்களைத் தாக்குகின்றன. எனவே, ஒரு பகுதி மாறியிருந்தாலும், மற்ற பகுதிகளும் தாக்கப்படுவதால் தடுப்பு மருந்தின் தாக்கம் இருக்கவே செய்யும்.
தடுப்பு மருந்து இப்போது வேலை செய்யும்
ஆனால் வைரஸ் இப்படித் தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்தால், நிலைமை மோசமாகிவிடும். அப்போது நிலைமை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் தற்போது தொர்ந்சு ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார். இந்த புதிய வகை கொரோனாவுக்கு எதிராகத் தடுப்பு மருந்து வேலை செய்யுமா என்பது நமக்கு உறுதியாகத் தெரிய இன்னும் சில மாதங்களாவது ஆகும். இது குறித்த ஆய்வின் முதல்கட்ட முடிவுகள் அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
இந்த புதிய வகை கொரோனாவால் பிரிட்டனில் நிலைமை கட்டுப்பாட்டைத் தாண்டி சென்றுவிட்டதாக அந்நாட்டின் சுகாதார செயலர் மேட் ஹான்காக் கூறியுள்ளார். மேலும், பிரிட்டனில் தற்போது நான்காம் நிலை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்யப்பட்டுள்ளன.
வேகமாகப் பரவுகிறது
ஏற்கனவே, இந்த புதிய வகை கொரோனா தற்போது நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன. இதன் காரணமாகப் பல நாட்டு அரசுகளும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துச் சிந்தித்து வருகின்றன.