இந்த முறை தப்பாது... மலாலாவை சுட்ட தலிபான் பயங்கரவாதி... மீண்டும் கொலை மிரட்டல்
லண்டன்: தற்போது பிரிட்டன் நாட்டில் வசித்து வரும் மலாலாவுக்கு தலிபான் பயங்கரவாதி மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் மலாலா. அந்நாட்டின் பெண்கள் கல்வி பெற வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். கடந்த 2012ஆம் ஆண்டு பள்ளி சென்று திரும்பிக் கொண்டிருந்த போது, தலிபான் பயங்கரவாதிகளால் சுடப்பட்டார்.
உயிருக்கு ஆபத்து ஏற்பட்டபோதிலும் மலாலா தொடர்ந்து பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இதற்காக கடந்த 2014ஆம் ஆண்டு மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. அவர் தற்போது பிரிட்டன் நாட்டில் வசித்து வருகிறார்.
மீண்டும் கொலை மிரட்டல்
இந்நிலையில், தலிபான்கள் முன்னாள் செய்தித் தொடர்பாளர் இஹ்ஸானுல்லா இஹ்சன் என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் மலாலாவுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதில், இரண்டாவது முறை உங்கள் வாழ்க்கையை எடுக்கும்போது அதில் எந்தத் தவறும் இருக்காது என்று பதிவிட்டிருந்தார். ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் மலாலாவை மிரட்டி தலிபான் பயங்கரவாதி பதிவிட்ட இந்த ட்வீட் வைரலானது.
மலாலா கேள்வி
இதையடுத்து இந்த ட்வீட்டை குறிப்பிட்டு மலாலா தனது ட்விட்டரில், "இவர் தலிபான் அமைப்பின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் . என் மீதும் பல அப்பாவி மக்கள் மீதும் தாக்குதல் நடத்தியதற்குப் பொறுப்பேற்றுள்ள இவர், இப்போது சமூக ஊடகங்களில் மக்களை மிரட்டுகிறார்.இவர் எப்படி தப்பினார்" என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறையிலிருந்து எஸ்கேப்
இதையடுத்து, இஹ்ஸானுல்லா இஹ்சனின் ட்விட்டர் பக்கத்தை நிரந்தரமாக முடக்குவதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. தலிபான் அமைப்பைச் சேர்ந்த இஹ்ஸானுல்லா இஹ்சன், கடந்த 2017ஆம் ஆண்டு பாகிஸ்தான் அரசுடனான ஒப்பந்தத்திந் கீழ் கைது செய்யப்பட்டார். அதன்படி சுமார் மூன்று ஆண்டுகள் சிறையிலிருந்த அவர், கடந்த 2020ஆம் ஆண்டு அங்கியிருந்து தப்பியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கொடூர பயங்கரவாதி
2014ஆம் ஆண்டில் பாகிஸ்தான் ராணுவ பள்ளி மீது தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஐந்து வயது குழந்தைகள் உட்பட 134 பேர் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூர தாக்குதல் உட்பட பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் முக்கிய குற்றவாளியாக இருப்பவர்தான் இப்போது மலாலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள இஹ்ஸானுல்லா இஹ்சன். இப்படிப்பட்ட பயங்கரவாதியைப் பாகிஸ்தான் போலீசார் தப்பிவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.