பெயில் கொடுத்தா ஓடிடுவாரு.. நீரவ் மோடியின் ஜாமின் மனு 3வது முறையாக தள்ளுபடி.. லண்டன் நீதிமன்றம்
லண்டன்: பஞ்சாப் வங்கியில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கி ஏமாற்றிவிட்டு லண்டனுக்கு ஓடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் ஜாமின் மனுவை லண்டன் நீதிமன்றம் 3வது முறையாக தள்ளுபடி செய்துள்ளது.
மும்பை வைர வியாபாரி நீரவ் மோடி (வயது 48), இவர் மும்பையின் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றின் கடன் உறுதி பத்திரங்களை பயன்படுத்தி, வெளிநாட்டு வங்கி கிளைகளில், சுமார்சுமார் ரூ.13 ஆயிரத்து 500 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக குற்றாச்சாட்டு உள்ளது.
இவர் இந்தியாவை விட்டு தப்பிச்சென்ற பிறகே பஞ்சாப் வங்கியில் மோசடி செய்த விவகாரம் தெரியவந்தது.
மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்பு.. எச்சரிக்கும் உளவுத்துறை.. இலங்கையில் பாதுகாப்பு அதிகரிப்பு!
லண்டனில் சிக்கிய நீரவ்
நீரவ் மோடி எந்த நாட்டில் இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த நிலையில், ஊடகங்கள் வாயிலாக இங்கிலாந்து நாட்டின் லண்டனில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்திய அரசு நீரவ் மோடியை நாடு கடத்துமாறு கோரிக்கை விடுத்தது. இதை ஏற்று இங்கிலாந்து நீதிமன்றம் நீரவ் மோடிக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது. இதன் பின்னர் லண்டன் போலீசார், நீரவ் மோடியை கடந்த மார்ச் 19ந்தேதி கைது செய்தனர்.
சிறையில் அடைப்பு
இதையடுத்து உடனடியாக 20ம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீரவ் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதை நீதிபதி மேரி மல்லான் தள்ளுபடி செய்துவிட்டார். இதையடுத்து போலீசார் நீரவ் மோடியை வேண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைத்தனர்.
நீரவ் மனு தள்ளுபடி
இதேபோல் கடந்த மார்ச் 29ம் தேதி நீதிமன்ற காவல் முடிந்த போதும் நீரவ் மோடி ஜாமின் மனு தாக்கல் செய்தார். அப்போது சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இருப்பதாக கூறி,அந்த மனுவையும் லண்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இப்போது மூன்றாவது முறையாக நீரவ் மோடி நேற்று ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார்.
நீரவ் மனு நிராகரிப்பு
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்மா அர்புத்நாட், இது ஒரு மிகப்பெரிய மோசடி, ஜாமினுக்கான உத்தரவாத தொகையாக 2 பில்லியன் பவுண்டுகள் போதாது. ஜாமின் வழங்கப்பட்டால் சரண் அடைவார் என்ற நம்பிக்கை இல்லை என்ற கூறி அவருக்கு ஜாமின் வழங்க முடியாது என உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை வரும் 30ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.