உங்களுக்கு ஆகஸ்ட் 22 வரை ஜெயில்தான்.. உறுதியாக சொன்ன நீதிமன்றம்.. நல்லது, நன்றி.. கூல் நீரவ் மோடி
லண்டன்: வங்கி மோசடி வழக்கில் தொடர்புள்ள, வைர வியாபாரி நீரவ் மோடிக்கு ஆகஸ்ட் 22ம் தேதிவரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அளவுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணமோசடி செய்த வழக்கு தொடர்பாக இந்தியாவிலிருந்து இங்கிலாந்து தப்பியோடியவர் வைர வியாபாரி நீரவ் மோடி.
இவரை இந்தியா அழைத்துவர அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அந்த நாட்டு போலீசாரால் நீரவ் மோடி கைது செய்யப்பட்டார். வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிபதி முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
வாண்ட்ஸ்வொர்த் சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் வழியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் நீரவ் மோடி. இதையடுத்து, நீதிபதி நீரவ் மோடியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 22 வரை நீட்டித்தார்.
48 வயதான மோடி, கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டதிலிருந்து தென்மேற்கு லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறையில்தான் அடைக்கப்பட்டுள்ளார். பணமோசடி வழக்கு தொடர்பாக இவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை இங்கிலாந்து உயர் நீதிமன்றம் கடந்த மாத தொடக்கத்தில் நிராகரித்தது. அதன் பின்னர் அவர் முதல் முறையாக இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
"ஆகஸ்ட் 22 ஆம் தேதிக்குள் நாங்கள் உங்களுக்காக ஒரு தேதியை அறிவிப்போம். நீங்கள் எதை நோக்கிச் செல்கிறீர்கள் என்பது உங்களுக்கு அப்போது தெரியும்" என்று நீதிபதி மோடியிடம் கூறினார்.
"நல்லது, நன்றி" என்று சிரித்தபடி பதில் சொன்னார் நீரவ் மோடி.