3-வது முறையாக நீரவ் மோடியின் ஜாமின் மனு நிராகரிப்பு.. காவலை நீடித்தது லண்டன் நீதிமன்றம்
லண்டன்: பல்லாயிரம் கோடி ரூபாய் கடனை வங்கியில் வாங்கி விட்டு கடனை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பியோடிய, நீரவ் மோடியின் ஜாமின் மனு மூன்றாவது முறையாக லண்டன் நீதிமன்றத்தில் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.
மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ்மோடி, தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் சேர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் வாங்கினார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் இருவரும் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டனர்.
பின்னர் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிய அமலாக்கத்துறையினர் நீரவ்மோடி, மெகுல் சோக்சி இருவரின் நவீன பங்களாக்களை முடக்கினர். மேலும் அவர்களது அசையும், அசையா சொத்துக்களும் முடக்கப்பட்டன. இதனிடையே வெளிநாடு தப்பிச்சென்ற நீரவ் மோடி இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியானது.
தகவல் வெளியான சில நாட்களிலேயே மாறு வேடத்தில் சுற்றித்திரிந்த நீரவ் மோடியை அடையாளம் கண்டு பேட்டி எடுத்தது பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று. இதனையடுத்து அவர் லண்டனில் தலைமறைவாக வாழ்வது உறுதி செய்யப்பட்டது. லண்டனில் தலைமறைவாக இருந்த நீரவ் மோடியை, இங்கிலாந்து போலீஸ் கைது செய்தது.
தற்போது கைதிகள் நெருக்கடி மிகுந்த வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவிற்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இருமுறை ஜாமின் கேட்டு தாக்கல் செய்த நிரவின் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக ஜாமின் கேட்டு வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. அவரை நாடு கடத்துவது தொடர்பான வழக்கின் மறுவிசாரணையை, மே 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டது. மேலும் நிரவ் மோடியின் சிறை காவலையும் வரும் மே 24-ம் தேதிவரை நீடித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.