ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அனுமதி! பிரிட்ஜில் கூட சேமிக்கலாம்.. விலையும் ரொம்ப கம்மி
லண்டன்: ஆக்ஸ்போர்டு கொரானா தடுப்பூசிக்கு, பிரிட்டன் மருந்து கட்டுப்பாட்டாளர் அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம், இந்தியாவில் அந்த நிறுவனம் தயாரிக்கும் கோவி ஷீல்டு தடுப்பூசிக்கு அனுமதி கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
அமெரிக்காவின் பைசர் மற்றும் மார்டனா ஆகிய நிறுவனங்களின், தடுப்பூசியை தொடர்ந்து இந்த தடுப்பூசியும் இங்கிலாந்தில் களமிறங்குகிறது.
பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ரா ஜெனெகா ஆகியவை இணைந்து உருவாக்கிய தடுப்பூசிக்கு, பிரிட்டனில் இப்போது ஒப்புதல் கிடைத்துள்ளது.
இன்னொரு வைரஸ் வந்தாச்சு.. 3வது புதிய கொரானா பரவ தொடங்கியது.. நைஜீரியாவில்..!
இந்தியாவில் அவசர பயன்பாடு
உலகம் முழுவதற்கும் குறைந்த விலையில், தடுப்பூசியை எடுத்து செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே அனுமதி கிடைக்கப்பட்ட அமெரிக்காவின் இரண்டு தடுப்பூசியும் இதைவிட சற்று விலை அதிகமானது. பிரிட்டனில் ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளதால் இந்தியாவில் இன்னும் ஓரிரு நாட்களில், இந்த தடுப்பூசி அவசர பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5 கோடி டோஸ் ரெடி
சீரம் இன்ஸ்டிடியூட்டில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, ஐந்து கோடிக்கும் அதிகமான கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கப்பட்டு விட்டது. இந்திய அரசு எப்போது ஒப்புதல் வழங்குகிறதோ அப்போது அவசர பயன்பாட்டுக்கு அதை பயன்படுத்த முடியும்.
அதிக கட்டமைப்பு, விலை
பைசர் மற்றும் மார்டனா ஆகிய இரண்டும் ஒரே மாதிரி தொழில்நுட்பத்தில் தடுப்பூசி உருவாக்கியுள்ளன. அவற்றை சேமித்து வைப்பதற்கு -20 முதல் -80 டிகிரி வரை வசதிகள் தேவை. எனவே வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்வதற்கும், உள் நாடுகளிலேயே தடுப்பூசி போட கூடிய இடங்களுக்கு எடுத்துச் செல்வதற்கும் அதிக செலவு பிடிக்கும் .அதற்கான கட்டமைப்பு வசதி இந்தியாவில் போதிய அளவு இல்லை. மார்டனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை 1,500 ரூபாய் வரையாகும். பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி விலை 3000 ரூபாய்க்கு மேல் இருக்கும். இதுவும் இந்தியாவில் ஒரு முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
எளிதாக சேமிக்கலாம்
எனவே, கோவிஷீல்டு என்று பெயரிடப்பட்டுள்ள ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின் தடுப்பூசிக்கு பிரிட்டன் ஒப்புதல் வழங்கியுள்ளதால், மூன்றாம் உலக நாடுகளுக்கு இந்த தடுப்பூசியை எளிதாக எடுத்துச்செல்ல முடியும். நாம் வீட்டில் பயன்படுத்தக் கூடிய குளிர் சாதனப்பெட்டியில் கூட மைனஸ் 2 டிகிரி முதல் மைனஸ் 8 டிகிரி வெப்ப நிலையில், இந்த மருந்துகளை சேமித்து வைத்து பயன்படுத்த முடியும். இதன் விலை சராசரியாக 300 முதல் 500 ரூபாய் விலையில் இருக்கும்.
புதிய வகை கொரோனா
இந்த தடுப்பூசி, புதிய வகை கொரோனா வைரஸையும் கட்டுப்படுத்த உதவும் என்பது மற்றொரு மகிழ்ச்சியான செய்தி. இதுவரை ஒப்புதல் பெற்ற அனைத்து தடுப்பூசி மருந்து நிறுவனங்களும் இதை உறுதியாக கூறிவிட்டன. இந்தியாவில் பாரத் பயோடெக் (கோவேக்சின் தடுப்பூசி), சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா (ஆக்ஸ்ஃபோர்டின் கோவிஷீல்டு தடுப்பூசி), ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் (எம்ஆர்என்ஏ தடுப்பூசி) ஆகிய 3 நிறுவனங்களும் அவசர கால பயன்பாட்டு அனு மதியை கோரி இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிக்கு ஏற்கனவே விண்ணப்பித்துள்ளன.