பக்க விளைவால் நிறுத்தப்பட்ட ஆக்ஸ்போர்ட் வேக்சின்.. மீண்டும் மனித சோதனையை தொடங்க.. பிரிட்டனில் அனுமதி
லண்டன்: ஆக்ஸ்போர்ட் பல்கலை. - ஆஸ்டர்செனகா நிறுவனத்தின் கொரோனா வேக்சின் மீதான மனித சோதனை மீண்டும் தொடங்கி உள்ளது. பக்க விளைவு காரணமாக பிரிட்டனில் சோதனை நிறுத்தப்பட்ட நிலையில் அங்கு மீண்டும் சோதனை தொடங்கி உள்ளது.
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து சோதனை தற்போது மிக முக்கியமான கட்டத்தில் உள்ளது. உலகம் முழுக்க 110க்கும் அதிகமான நிறுவனங்கள் கொரோனா தடுப்பு வேக்சினை உருவாக்க தீவிரமாக முயன்று வருகிறது.
கொரோனா வைரசுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ள தடுப்பு மருந்து அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
5 லட்சத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு.. இன்று தமிழகத்தில் 5495 பேருக்கு கொரோனா.. கோவையில் உச்சம்!
மனிதர்கள் சோதனை
ஆக்ஸ்போர்ட் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் ChAdOx1 nCoV-19 தடுப்பூசி மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆக்ஸ்போர்ட் உடன் ஆஸ்டெராசெனெகா (AstraZeneca) நிறுவனம் இணைந்து இந்த சோதனையை செய்து வருகிறது. இதன் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனை தற்போது வெற்றிபெற்றுள்ளது. இந்த மருந்துக்கு தற்போது AZD1222 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் என்ன
இதில் முதல் இரண்டு கட்ட மனித சோதனை வெற்றி பெற்றது. இந்த வேக்சின் அளிக்கப்பட்ட நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. அதேபோல் பெரிய அளவில் பின்விளைவுகளும் இல்லை. லேசான காய்ச்சல் மட்டுமே இருந்தது. ஆனால் மூன்றாம் கட்ட மனித சோதனையில் சிலருக்கு மோசமான உடல் பாதிப்புகள் ஏற்பட்டது. கடுமையான காய்ச்சல் தொடங்கி நரம்பில் சின்ன பாதிப்புகள் வரை ஏற்பட்டது.
நிறுத்தப்பட்டது
லண்டனில் இப்படி ஒருவருக்கு உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து AZD1222 வேக்சின் சோதனை பிரிட்டனில் நிறுத்தப்பட்டது. அதோடு இந்த மருந்தின் பாதுகாப்பு குறித்து சோதனை செய்ய உலக சுகாதார மையத்தின் வழிகாட்டுதலின்படி தனி அமைப்பு உருவாக்கப்பட்டது. இவர்கள் AZD1222 வேக்சினின் பாதுகாப்பு குறித்து சோதனை செய்தனர். பக்க விளைவு குறித்து இவர்கள் விசாரணை நடத்தினார்கள்.
அனுமதி அளித்தனர்
இந்த விசாரணையின் முடிவில், AZD1222 வேக்சினின் மனித சோதனையை தொடரலாம் என்று அந்த குழு அனுமதி அளித்தது. மருந்து பாதுகாப்பாக உள்ளது . அதனால் மருந்தின் சோதனையை தொடரலாம் என்று அறிவித்தது. இதையடுத்து கொரோனாவிற்கு எதிரான ஆக்ஸ்போர்ட் - ஆஸ்டர்செனகா தடுப்பு வேக்சின் மீதான மனித சோதனை மீண்டும் தொடங்கி உள்ளது.
இந்தியா டெல்லி
பக்க விளைவு காரணமாக பிரிட்டனில் சோதனை நிறுத்தபப்ட்ட நிலையில் அங்கு மீண்டும் சோதனை தொடங்கி உள்ளது. பிரிட்டனில் மட்டுமின்றி இந்தியா உட்பட நான்கு நாடுகளில் இந்த வேக்சின் கொடுக்கப்பட்டவர்களுக்கு பக்க விளைவு ஏற்பட்டது. இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் இந்த மருந்தின் மனித சோதனையை நிறுத்திய நிலையில் தற்போது பிரிட்டனில் மனித சோதனையை தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.