கொரோனா பரவ 5ஜி நெட்வொர்க் காரணமா? இங்கிலாந்தில் செல்போன் கோபுரங்களை கொளுத்திய மக்கள்
லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா பரவலுக்கு 5ஜி நெட்வொர்க் காரணம் என்ற பரவிய புரளியை நம்பி , செல்போன் கோபுரங்களை மக்கள் கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 5500 பேர் அங்கு உயிரிழந்துள்ளார்கள்.
இந்நிலையில் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு 5ஜி நெட்வொர்க் சேவைகள் தான் காரணமாக இருப்பதாகவும், 5ஜி நெட்வொர்க் கோபுரங்கள் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணம் என்றும் வதந்திகள் பரவின.
செல்போன் கோபுரங்கள் அழிப்பு
ஆனால் வதந்தியை உண்மை என்று நம்பிய மக்கள்,. இங்கிலாந்தில் பல்வேறு இடங்களில் செல்போன் கோபுரங்கள் தேடித்தேடி அழிக்க தொடங்கி உள்ளனர். லிவர்பூல், வெஸ்ட் மிட்லேண்ட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செல்போன் கோபுரங்கள் அழிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
4ஜி கோபுரங்கள் அழிப்பு
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்கள் தீவைத்து எரித்து அழிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் உண்மையில் இப்போது எரிக்கப்பட்ட பல கோபுரங்கள் 4ஜி செல்போன் கோபுரங்கள் ஆகும்.5ஜி கோபுரங்கள் இன்னும் பல இடங்களில் வைக்கப்படவில்லை. இன்னமும் அங்கு துரிதமாக 5ஜி சேவை தொடங்கப்படவில்லை. ஆனால் வதந்தியை நம்பிய மக்கள் செல்போன் கோபுரங்கள் அனைத்தையும் தீ வைத்து அழித்து வருகிறார்கள்.
செல்போன் ஊழியர்கள் காயம்
மறுபக்கம் தொலைத்தொடர்பு நிறுவன ஊழியர்களையும் பொதுமக்கள் பிடித்து வைத்து தாக்கி வருகிறார்கள். தொலைதொடர்பு ஊழியர்களை பொதுமக்கள் தாக்கும் சம்பவங்கள் அங்கு கடந்த சில வாரங்களில் மட்டும் பல இடங்களில் நடந்துள்ளன. இது தொடர்பாக சமூக ஊடங்களில் வீடியோக்களும் வெளியாகி உள்ளன.
யாரும் நம்ப வேண்டாம்
இதனால் இங்கிலாந்தில் உள்ள ஓ2, மொலைப்யுகே உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கொரோனாவுக்கு 5ஜி நெட்வொர்க்கிற்கும் விஞ்ஞான ரீதியாக எந்த தொடர்பும் இல்லை என்றும் இது முற்றிலும் வதந்தி என்றும் பத்திரக்கைகளில் விளம்பரங்கள் கொடுத்து வருகின்றன. இன்னொரு பக்கம் தங்கள் ஊழியர்களை தாக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றன. தற்போது கொரோனாவால் இங்கிலாந்தில் புது பிரச்சனை தலை தூக்கி உள்ளது.