ஒரு லட்சத்தை நெருங்கும் கொரோனா உயிரிழப்பு.. நானே முழு பொறுப்பு.. பிரதமர் போரிஸ் ஜான்சான் உருக்கம்
லண்டன்: பிரிட்டன் நாட்டில் கொரோனா உயிரிழப்பு ஒரு லட்சத்தை நெருங்கும் நிலையில், இதற்கு முழு பொறுப்பையும் தானே ஏற்பதாக அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சான் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில மாதங்களாகவே மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் வைரஸ் தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேலும், ஊரடங்கை மீண்டும் அறிவித்தால் பொருளாதார பாதிப்பு மிகவும் மோசமாக இருக்கும் என்பதால் மீண்டும் ஊரடங்கை அறிவிக்க பல்வேறு நாடுகளும் தயக்கம் காட்டுகின்றன. தற்போதைய சூழ்நிலையில், தடுப்பூசி மட்டுமே வைரஸ் பரவலை நிறுத்தும் ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது.
உருமாறிய கொரோனா
இந்தச் சூழ்நிலையில், கடந்த அக்டோபர்-நவம்பர் காலத்தில் லண்டன் பகுதியில் கொரோனா பரவும் வேகம் பல மடங்கு அதிகரித்து. இது தொடர்பாக அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் உருமாறிய கொரோனாவை கண்டறிந்தனர். இந்த உருமாறிய கொரோனா, அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும்கூட இது மற்ற வகைகளை விட 70% வரை வேகமாகப் பரவும் என்றும் எச்சரித்தனர்.
முழு பொறுப்பு
இதையடுத்து, கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவல் பிரிட்டன் முழுவதுமே அதிகரித்தது. உயிரிழப்புகளும் ஒரு லட்சத்தை நெருங்குகிறது. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், "தற்போது நாம் இழந்துள்ள ஒவ்வொரு உயிருக்காகவும் நான் வருந்துகிறேன். ஒரு பிரதமராக இந்த அரசு எடுத்து அனைத்திற்கும் நான் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன்" என்றார்.
கட்டுப்பாடுகள்
பிரிட்டனில் உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டவுடனேயே பல்வேறு கட்டுப்பாடுகளை போரிஸ் ஜான்சன் அறிவித்தார். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடை விதித்தார். மேலும், அத்தியாவசிய கடைகளைத் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டன. கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன், ஊரடங்கு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவித்திருந்தார்.
கொரோனா பாதிப்பு
ஐரோப்பாவிலேயே பிரிட்டன் காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாகப் பிரிட்டன் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், அங்குப் புதிதாகப் பேருக்கு 20,089 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் அங்கு கொரோனா பாதிப்பு 36.89 லட்சமாக அதிகரித்துள்ளது. அதேபோல நேற்று மட்டும் கொரோனாவால் 1,631 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா உயிரிழப்பு பிரிட்டனில் ஒரு லட்சத்தை நெருங்குகிறது.