லண்டனில் எட்டு மாத கர்ப்பிணி கொடூரக்கொலை - ஆபத்தான நிலையில் சிசுவிற்கு சிகிச்சை
லண்டனில் நிறைமாத கர்ப்பிணியை குத்தி கொலை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த பின்னரும் வயிற்றில் இருந்த குழந்தை அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்டுள்ளது.
லண்டன்: நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் தெற்கு லண்டனில் ஒரு பெண்ணை கத்தியால் குத்தி கொன்றுள்ளனர். இந்த கொடூர கொலை தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொல்லப்பட்ட அந்தப் பெண்ணின் பெயர் கெல்லி மேரி என்பதாகும். கர்ப்பமான நாள் முதலாகவே வயிற்றை தடவிப்பார்த்து பிரசவ நாளை எண்ணிக்கொண்டிருந்த அந்தப்பெண்ணுக்கு எமன் இரண்டு பேர் வடிவத்தில் வருவார்கள் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். வீட்டிற்குள் புகுந்த அந்த இருவர் தங்களின் கைகளில் இருந்த கத்தியால் குத்தி ரத்த வெள்ளத்தில் சாய்த்து விட்டு ஓடிவிட்டனர்.
தெற்கு லண்டனின் குரோய்டோனில் உள்ள குடியிருப்பில் ஒரு வீட்டில் கர்ப்பிணிப் பெண் கத்தி குத்து காயங்களுடன் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. எட்டுமாதம் கர்ப்பமாக இருந்த அந்தப்பெண் கொல்லப்பட்டதில் ஹார்ட் அட்டாக் வந்து மரணமடைந்துள்ளார்.
அந்தப்பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்துள்ளனர் கத்திக்குத்து காயத்தால் குழந்தையும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது. மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர். கொலை நடந்த இடத்தில் சிசிடிவி தடயங்களை ஆய்வு செய்த போலீசார், குற்றவாளிகள் இருவரை கைது செய்துள்ளனர். கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த கொடூர கொலை சம்பவத்திற்கு லண்டன் மேயர் சாதிக் கான் கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் குழந்தையின் நிலை நெஞ்சை உறையவைக்கிறது என்றும் கருத்து கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் கர்ப்பிணிப் பெண்ணை கார் டிரைவர் கத்தியால் குத்தி கொன்று விட்டு காரை திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சி அலைகளை உருவாக்கிறது. அதைவிட கொடூரமான முறையில் லண்டனில் கர்ப்பிணிப் பெண் கொல்லப்பட்டுள்ளார்.