ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு எதிராக ரஷ்யா செய்த பகீர் காரியம்.. இங்கிலாந்து கடும் அதிர்ச்சி
லண்டன்: ஆக்ஸ்போர்டு தடுப்பூசி போட்டால் குரங்காக மாறி விடுவீர்கள் என ரஷ்யா செய்த விஷம பிரசாரத்தால் அதிர்ச்சி அடைந்த இங்கிலாந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசிக்கு மருந்து கண்டுபிடிக்க உலகின் பல்வேறு நாடுகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றன. எந்த தடுப்பூசியும் இதுவரை சரியான தீர்வை தந்ததாக உலக சுகாதார மையம் உறுதி செய்யவில்லை.
எனினும் அவசர கால பயன்பாட்டிற்காக பல்வேறு நாடுகள் கிடைக்கும் மருந்தை பயன்படுத்தி வருகின்றன. தற்போதைய நிலையில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி போன்றவை சோதனையில் முன்னணியில் உள்ளன. அமெரிக்காவின் ரெம்டெசிவிர் மருந்தும் சோதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த மருந்து போதிய பலனை தரவில்லை என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
வாங்க முன்வரவில்லை
ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி மட்டுமே தற்போதைய நிலையில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட தடுப்பூசியாக உள்ளது. இந்த மருந்தை போட்டுக்கொண்ட ரஷ்ய அதிபர் புதினின் மகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்தாக ரஷ்யா கூறி வருகிறது. எனினும் ரஷ்ய மருந்தின் நம்பகத்தன்மை குறித்து மேற்கத்திய நாடுகளுக்கு நம்பிக்கை வரவில்லை. அதையாரும் வாங்க முன்வரவில்லை.
ரஷ்யா விஷமம்
இந்நிலையில் மேற்கத்திய நாடுகளால் தற்போது நம்பிக்கை தரும் மருந்தாக பார்க்கப்படுவது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வரும் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே. இந்த மருந்து இறுதிகட்டஆய்வில் உள்ள நிலையில், அதை பற்றி எதிர்மறையாக கருத்துக்களை பரப்பும் வகையில் ரஷ்யா விஷம பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
ஆக்ஸ்போர்டு மருந்து
ஆக்ஸ்போர்டு மருந்தை பயன்படுத்தினால் குரங்காக மாறிவிடுவார்கள் என்றும், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த ஆக்ஸ்போர்டு மருந்தை பயன்படுத்தியதால் அவருக்கு குரங்கு முகம் வந்துவிட்டது என்றும் கிராபிக்ஸ் படங்களை ரஷ்ய தொலைக்காட்சிகள் கிண்டல் செய்து வெளியிட்டு வருகின்றன.
அஸ்ட்ராஜெனிகா
அத்துடன் தடுப்பூசி தயாரிக்கும் அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்தின் ஆய்வக உடையில் குரங்கு இருப்பது போலவும், அஸ்ட்ராஜெனிகா மருத்துவமனை செல்லும் மக்கள் குரங்குகளாக மாறிவருவதாகவும் புகைப்படங்களை ரஷ்யாவில் பரப்பி வருகிறார்கள். இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு அஸ்ட்ராஜென்கா நிறுவனம் உள்பட இங்கிலாந்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.