ரஷ்யாவின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்படுமா.. உலக சுகாதார மையம் அளித்த அதிரடி பதில்
லண்டன்: ரஷ்யாவின் தடுப்பூசி குறித்து இந்த நேரத்தில் ஒப்புதல் அளிக்க போதுமான தகவல்கள் எங்களிடம் இல்லை என்று உலக சுகாதார மையத்தின் (WHO) இயக்குநர் ஜெனரலின் மூத்த ஆலோசகர் டாக்டர் புரூஸ் அய்ல்வர்ட் கூறினார்.
கொரோனா (COVID-19) தடுப்பூசிக்கு இரண்டு மாதங்கள் கூட சரிவர மனித பரிசோதனைகள் நடத்தப்படாமல் உள்ளது. ஆனாலும் கொரோனா தடுப்பூசிக்கு, ஒழுங்குமுறை ஒப்புதல் அளித்த உலகின் முதல் நாடாக ரஷ்யா பதிவு செய்துள்ளது,
அதிபர் விளாடிமிர் புடின் இந்த தகவலை செவ்வாய்க்கிழமை அறிவித்தார். மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த ரஷ்ய அதிபர் புடின் தனது மகளுக்கு தடுப்பூசியை போட்டுள்ளார். இந்த நோய்த்தடுப்பு மருந்து இரண்டு ஆண்டுகள் வரை மக்களைப் பாதுகாக்கிறது என்றும் கூறினார்.
மோசமடையும் கொரோனா.. ஒரே நாளில் உலகம் முழுக்க 264935 கேஸ்கள்.. மொத்தமாக 21062471 பேர் பாதிப்பு
ரஷ்ய தடுப்பூசி குறித்து
இதனிடையே இறுதி சோதனைகள் நிறைவடைவதற்கு முன்னர் ஒப்புதல் வழங்கிய ரஷ்யாவின் முடிவு உலக சுகாதார மையத்திற்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வாரம் ரஷ்யாவால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி பரிசோதனை குறித்த தகவல்கள் எங்களிடம் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
COVID-19 தடுப்பூசி
உலக சுகாதார மையம் தடுப்பூசியை உருவாக்கும் விஷயத்தில் கூட்டணியில் உள்ள நாடுகளுடன் இணைந்து ஒன்பது சோதனை COVID-19 தடுப்பூசிகளை ஒரு முதலீட்டு பொறிமுறையில் சேர்த்துள்ளது, கோவக்ஸ் வசதி என அழைக்கப்படும் இதில் நாடுகளை சேர ஊக்குவிக்கிறது. ஆரம்பகால அணுகலைப் பெற பல தடுப்பூசிகளில் முதலீடு செய்ய நாடுகளை இந்த முயற்சி அனுமதிக்கிறது. அதே நேரத்தில் வளரும் நாடுகளுக்கு கோட்பாட்டளவில் நிதி வழங்குகிறது.
ஒப்புதல் அளிக்க இயலாது
இந்நிலையில் இந்த வாரம் ரஷ்யாவால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி, மேம்பட்ட சோதனை நிலைகளில் இல்லை என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார மையத்தின் (WHO) இயக்குநர் ஜெனரலின் மூத்த ஆலோசகர் டாக்டர் புரூஸ் அய்ல்வர்ட் இது பற்றி கூறுகையில், ரஷ்யாவின் தடுப்பூசி குறித்து இந்த நேரத்தில் ஒப்புதல் அளிக்க போதுமான தகவல்கள் எங்களிடம் இல்லை. தடுப்பூசி தயாரிப்புகளின் நிலை, மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் மற்றும் அடுத்த படிகள் என்ன என்பதைப் புரிந்துகொள்ள கூடுதல் தகவல்களைப் பெற நாங்கள் தற்போது ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்" என்றார்.
தடுப்பூசி தயாரிக்க ஆர்வம்
இதனிடையே ரஷ்யா, இந்த சோதனைகள் எதை பற்றியும் கவலைப்படாமல் அக்டோபர் முதல் நாட்டு மக்களுக்கு பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டு வருகிறது. சில நாடுகளும் இந்த மருந்தை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன. எனினும் ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் சரியாக பரிசோதிக்கப்படாத தடுப்பூசி என்று ரஷ்யாவின் தடுப்பூசி குறித்து எச்சரித்து வருகின்றன.