கோவிஷீல்டு தயாரிக்கும் சீரம் நிறுவன தலைவர் பூனாவல்லாவின் மொத்த குடும்பமும் இங்கிலாந்தில்!
லண்டன்: கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தலைவரான சைரஸ் பூனாவாலா, அவரது மகன் அதார் பூனாவல்லா உள்ளிட்ட மொத்த குடும்பமும் இப்போது இங்கிலாந்தில் முகாமிட்டிருப்பது விவாதப் பொருளாகி உள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது முதலே சீரம் இன்ஸ்ட்டியூட் நிறுவனமும் அதன் கோவிஷீல்டு தடுப்பூசியும் பெரும் சர்ச்சையாக தொடருகிறது. கோவிஷீல்டு தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனை முடிவு என்ன என்பது தெரியாமலேயே பொதுமக்களுக்கு போட அறிவுறுத்தப்பட்டது என புகார் எழுந்தது.
மாநிலங்களுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி விலை ரூ 100 குறைப்பு- சீரம் நிறுவனம்
பாஜக-சீரம் நிறுவனம்
மேலும் பாரதிய ஜனதா கட்சிக்கு பெருமளவு நன்கொடை கொடுத்த நிறுவனம் என்பதாலேயே சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது என்கிற சர்ச்சையும் வெடித்தது. அத்துடன் சீரம் மற்றும் பாரத் பயோட்க் நிறுவனங்களுக்கு கொரோனா தடுப்பூசி தயாரிக்க ரூ4,500 கோடி மத்திய அரசு கொடுத்தது. இதில் ரூ3,000 கோடி சீரம் நிறுவனத்துக்கு மட்டும் கொடுக்கப்பட்டதும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.
தடுப்பூசி விலையில் சர்ச்சை
இதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பூசிகள் விலை சர்ச்சையிலும் சீரம் நிறுவனம் சிக்கியது. நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அப்போதே கொரோனா தடுப்பூசி விலைகளை பல மடங்கு உயர்த்தி அறிவித்தது சீரம். ஒரே ஒரு தடுப்பூசிக்கு மத்திய அரசுக்கு ஒரு விலை- மாநில அரசுகளுக்கு ஒரு விலை- தனியார் மருத்துவமனைகளுக்கு ஒருவிலையா? என்கிற கேள்வி எழுந்தது.
திடீர் பல்டி அடித்த சீரம்
இந்த சூழலில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவித்திருப்பதால் அவ்வளவு தடுப்பூசிகளை உடனே தயாரிக்க இயலாது என பல்டி அடித்தது சீரம். இதுவும் சர்ச்சையானது. கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறைக்கு சீரம் நிறுவனம்தான் காரணம் என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. ஆனால் இதை சீரம் நிறுவன தலைவர் சைரஸ் பூனவல்ல, அவரது மகன் அதார் பூனவல்ல மறுத்திருந்தனர்.
பாஜகவிலும் கோபம்
உத்தப்பிரதேசத்தின் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. கூட, அதார் பூனவல்லாவின் இந்த போக்கை கடுமையாக விமர்சித்து கொள்ளைக்காரன் என சாடியிருந்தார். அத்துடன் மத்திய அரசு சீரம் நிறுவனத்தை உடனே கையகப்படுத்தி மக்கள் உயிர் காக்கும் தடுப்பூசிகளை தயாரிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இங்கிலாந்தில் அதார் பூனவல்ல
இந்த பின்னணியில் அதார் பூனவல்ல திடீரென இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றார். அவர் மட்டுமல்ல.. பூனவல்லவின் ஒட்டுமொத்த குடும்பமும் இங்கிலாந்தில் டேரா போட்டுள்ளது. இது தொடர்பாக கேட்டபோது, இங்கிருந்தே நான் அத்தனை கொரோனா தடுப்பூசி பணிகளையும் மேற்பார்வையிடுவேன். தடுப்பூசி தயாரிப்புகளில் எந்த பிரச்சனையும் வராது.. நாங்கள் கோடை விடுமுறை சுற்றுலாவுக்காகவே இங்கிலாந்து வந்துள்ளோம் என்றார்.
சைரஸ் பூனவல்லவும் பயணம்
இப்போது அவரது தந்தை சைரஸ் பூனவல்லவும் இங்கிலாந்தில் குடும்பத்துடன் இணைந்துள்ளார். இந்தியாவில் மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்து கொண்டிருக்கின்றனர். இவர்களது உயிர்களை காக்கும் கொரோனா தடுப்பூசியை பூனவல்லவின் சீரம் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தியாவை விட்டு வெளியேறவில்லை- சைரஸ்
ஆனால் இந்தியர்கள் செத்து மடிந்தாலும் பரவாயில்லை.. எங்களுக்கு எங்கள் குடும்பமும் கோடை விடுமுறையும்தான் முக்கியம் என இங்கிலாந்துக்கு பூனவல்ல குடும்பத்தினர் சென்றிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இருப்பினும் தாம் இந்தியாவைவிட்டு வெளியேறவில்லை. விரைவில் குடும்பத்துடன் இந்தியாவுக்கு திரும்புவேன் என திட்டவட்டமாக சொல்கிறார் பூனவல்ல. ஏதோ ஒன்று நடக்கிறது..நடக்கப் போகிறது என்பது மட்டும் பூனவல்லவின் வெளிநாட்டு பயணம் திட்டவட்டமாக சொல்கிறது.