அந்த போதைப் பழக்கம் வேண்டாம்.. கொரோனா பரவும் ஆபத்து.. எச்சரிக்கும் மருத்துவர்கள்!
லண்டன் : இங்கிலாந்து மருத்துவர் ஒருவர் கஞ்சா புகைக்கும் போதைப் பழக்கம் இருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
முன்னதாக சிகரெட் புகைப் பழக்கம் கொண்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
தற்போது கஞ்சா புகைக்கும் பழக்கமும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் வாய்ப்பை அதிகமாக்கக் கூடும் என கூறி உள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு
உலகில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது 12 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 66,000க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். உலகின் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை அறிவித்துள்ளன.
ஒரே வழி இதுதான்
இந்த கொரோனா வைரஸ் கிருமியை தடுத்து நிறுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தங்களுக்கு வராமல் ஒவ்வொரு மனிதனும் தன்னை முன்னெச்சரிக்கையாக காத்துக் கொள்வது மட்டுமே இந்த பாதிப்பு ஏற்படாமல் தப்பிக்க ஒரே வழியாக உள்ளது.
கவனமாக இருக்க வேண்டும்
அந்த வகையில் மருத்துவர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி அறிவுறுத்தி வருகிறார்கள். குறிப்பாக, நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்து இருக்கிறார்கள்.
புகைப் பழக்கத்தால் அபாயம்
நுரையீரல் பாதிப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஆகிய இரண்டுமே சிகரெட் புகைப்பவர்களுக்கு இருக்கக் கூடிய பிரச்சனை. இதை அடுத்து, மருத்துவர்கள் ஆய்வு நடத்தி புகைப் பழக்கம் இருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதை சுட்டிக் காட்டி எச்சரித்தனர்.
கஞ்சா குறித்த வதந்தி
இந்த நிலையில், கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்கலாம் என வெளியாகி வரும் பல வதந்திகளை நம்பி பலரும் பல சிக்கல்களில் சிக்கி வருகிறார்கள். அப்படி ஒரு வதந்தி தான் கஞ்சா புகைத்தால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாது என்பது.
வதந்தியை நம்பி..
இந்தியாவில் வேண்டுமானால் கஞ்சா பயன்படுத்துவது, விற்பது, வாங்குவது ஆகியவை பெரிய குற்றமாக இருக்கலாம். ஆனால், பல நாடுகளில் குறிப்பிட்ட அளவு வரை கஞ்சா பயன்படுத்த அனுமதி உள்ளது. அங்கெல்லாம் பலர் இந்த வதந்தியை நம்பி கஞ்சா புகைக்கத் துவங்கினர்.
அபாயத்தை அதிகரிக்கவே செய்யும்
இந்த நிலையில், இங்கிலாந்து மருத்துவர் ஸ்டாண்டன் கிளாண்ட்ஸ், கஞ்சா புகைப்பது கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் எனக் கூறி இருக்கிறார். "புகை பிடிப்பதால் வைரஸ் காய்ச்சல் வராது. ஆனால், புகை பிடிப்பவர்கள் மற்றும் வேறு ஒருவரிடம் வாங்கி புகைப்பவர்கள் நோயில் சிக்க அதிக வாய்ப்புள்ளது" என கூறி உள்ளார் அவர்.
நுரையீரல் பாதிப்பு
"கொரோனா வைரஸ் குறித்து நம்மிடம் அதிக தகவல்கள் இல்லை. ஆனால், புகைப்பழக்கம் நுரையீரலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் என்பதற்கு நிறைய ஆதாரம் உள்ளது. கஞ்சா புகைப்பதையும், புகையிலை புகைப்பதையும் ஒப்பிட்டு பார்த்தால், பெரிய வித்தியாசமில்லை" எனவும் அவர் கூறினார்.
ஆய்வுகள் குறைவு
எனினும், கஞ்சா மீதான ஆய்வுகள் மிகவும் குறைவாக இருப்பதால், கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுமா? என உறுதியாக கூற முடியவில்லை எனவும் கூறினார் ஸ்டாண்டன். கிறிஸ் விட்டி என்ற பேராசிரியர் கூறுகையில், "நீங்கள் புகைப் பழக்கத்தை விட நினைக்கிறீர்கள் என்றால், அதற்கு இதுதான் சரியான தருணம்" என கூறி உள்ளார்.
எளிதான தீர்வு
கஞ்சா, புகையிலை பழக்கம் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். முடிந்தால் கொரோனா வைரஸை காரணமாக வைத்தாவது அந்த பழக்கத்தை விட்டு விட வேண்டும் என்பதே இவர்கள் சொல்லும் எளிதான தீர்வு. இந்த நேரத்தில் புகை பழக்கம் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்.