பிரிட்டன் உருமாறிய கொரோனா... தடுப்பூசிக்கு கட்டுப்படாமல் போகலாம்... ஆய்வில் அதிர்ச்சி தகவல்
லண்டன்: பிரிட்டன் நாட்டில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் தடுப்பூசிக்குக் கட்டுப்படாமல் போகும் வாய்ப்பு உள்ளதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளும்கூட கொரோனா பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அந்நாடுகள் விரைவுபடுத்தியுள்ளன.
தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசி மட்டுமே கொரோனாவைக் கட்டுப்படுத்த ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது. இதற்காக ஃபைசர், மாடர்னா, ஆக்ஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு தடுப்பூசிகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் வகை கொரோனா
இந்தச் சூழ்நிலையில்தான் கடந்தாண்டு நவம்பர் மாதம் B.1.1.7 என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. முதலில் லண்டன் நகரில் பரவ தொடங்கிய இந்த உருமாறிய கொரோனா தற்போது 72க்கும் மேற்பட்ட நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த உருமாறிய கொரோனா, மற்ற வகைகளைவிட 20 முதல் 40% வரை வேகமாக பரவுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தடுப்பூசி வேலை செய்யுமா
தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகள் அனைத்தும், உருமாறிய கொரோனா பரவலுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது என்பதால் தடுப்பூசி, இந்த வகைகளுக்கு எதிராகப் பலன் அளிக்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டது. இருப்பினும், பிரிட்டனில் பரவும் B.1.1.7 வகை கொரோனாவுக்கு எதிராகத் தடுப்பூசி செயல்படும் என்றே இதுவரை வெளியான ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
மற்ற உருமாறிய கொரோனா வகைகள்
அதேநேரம் தென்னாப்பிரிக்காவில் பரவும் மற்றொரு உருமாறிய கொரோனா தடுப்பூசிகளுக்கு எதிராகக் குறைவாகவே கட்டுப்படுகிறது. குறிப்பாக, மாடர்னா மற்றும் ஜான்சன் தடுப்பூசிகளின் பலன் தென்னாப்பிரிக்கா வகைகளுக்கு எதிராகக் குறைந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த வகை கொரோனா இதுவரை 31 நாடுகளில் பரவியுள்ளது.பிரிட்டன் நாட்டில் E484K என்ற மற்றொரு வகை கொரோனாவும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை கொரோனா செல்களை மிக மோசமாக பாதிப்பதால், இந்த கொரோனாவுக்கு எதிராகத் தடுப்பூசிகள் பலனளிக்காமல் போகலாம் என்று தற்போது பிரிட்டன் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
உருமாறுவது ஏன்
பொதுவாக தடுப்பூசிகளிலிருந்து தப்பித்துக்கொள்ள அனைத்து வகையான வைரஸ்களும் உருமாறிக்கொண்டே இருக்கும். இது இயல்பான ஒன்று, புதிய செல்களை பாதிக்கும் கொரோனா வகைகள் உருமாறும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அப்படி உருமாறும் கொரோனா வைரஸ்கள் அனைத்தும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது. சில வகை அதிக பாதிப்பை ஏற்படுத்தும், சில வகை அப்படியே அழிந்துவிடும்.