ஆஹா.. குட் நியூஸ்.. கொரோனாவுக்கு காசநோய் தடுப்பூசி.. மகிழ்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லண்டன்: காசநோய் தடுப்பூசியை கட்டாயமாக்காத நாடுகளைவிட, காசநோய் தடுப்பூசியை கட்டாயமாக்கிய நாடுகளில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள், மிக குறைவாகவே இருப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
இது வரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத பூர்வாங்க ஆய்வின் தகவல் ஒன்று மருத்துவ ஆராய்ச்சிக்கான தளமான medRxiv இல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பூர்வாங்க ஆய்வில், காசநோய் தடுப்பூசியான பி.சி.ஜி தடுப்பூசியை குடிமக்களுக்கு காட்டாயமாக பயன்படுத்தும் நாடுகளில் மிகக்குறைந்த அளவே கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது
பி.சி.ஜி தடுப்பூசி காசநோய்க்கு காரணமாக பாக்டீரியாவுக்கு மட்டுமல்லாமல் மற்ற வகை தொற்றுநோய்களுக்கும் எதிராக பாதுகாப்பை அளிப்பதைக் காட்டும் ஆய்வுகள் பற்றி தனக்குத் தெரியும் என்று ஒட்டாசு என்ற ஆய்வாளர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு சர்வதேச நடவடிக்கைக்கு மோடியை தலைமை ஏற்க 18 நாடுகள் வலியுறுத்தினவா?
காசநோய் தடுப்பூசி
ஒட்டாசுவின் குழுவினர் தான் பி.சி.ஜி தடுப்பூசி கொள்கைகள் உள்ள நாடுகள் எவை, அவை எப்போது இருந்து பின்பற்றி வருகின்றன. அதற்கான தகவல்களை வைத்து கொரோனா வைரஸ் பரவுவது மற்றும் உயிரிழப்பு ஏற்படுவது குறித்த ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் தான் காசநோய் தடுப்பூசி பயன்படுத்தும் நாடுகளுக்கும் கொரோனோ குறைவாக இருப்பதற்கும் வலுவான தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இத்தாலியும் அப்படித்தான்
கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வரும் நாடுகளில், அமெரிக்காவும் இத்தாலியும் பி.சி.ஜி தடுப்பூசிகளை பரிந்துரைக்கின்றன, ஆனால் ஆபத்தில் இருக்கும் மக்களுக்கு மட்டுமே அதை பரிந்துரைக்கின்றன. ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகியவை பி.சி.ஜி தடுப்பூசி கொள்கைகளைக் கொண்டிருந்தன. ஆனால் அவை பல ஆண்டுகளுக்கு முன்பே கைவிட்டுவிட்டன.
தடுப்பூசியால் குறைவு
கொரோனா வைரஸ். தொற்றுநோய் தொடங்கிய சீனாவும் பி.சி.ஜி தடுப்பூசி கொள்கையைக் கொண்டுள்ளது, ஆனால் இது 1976 க்கு முன்னர் சரியாகப் பின்பற்றப்படவில்லை. ஆனால் கொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த முடிந்த ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் உலகளாவிய பி.சி.ஜி தடுப்பூசி போடப்படுவது இப்போதும் கட்டாயமாக உள்ளது தெரியவந்துள்ளது என்று ஆய்வாளர் ஒட்டாசு தெரிவித்தார்.
அறிவியல் ஆய்வு
கிட்டத்தட்ட 950,000 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில் சுமார் 48000 பேர் இறந்துள்ள நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த உலகமே போராடி வருகிறது. ஆனால் இந்த நோய்க்கான எந்தவொரு தடுப்பூசியும் மருந்தும் கிடைக்க குறைந்தது ஒரு வருடம் ஆகும் என்ற நிலை உள்ளது. எனினும் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளின் சோதனை முடிவுகளும் எதுவும் உடனே தெரியவராது. அதனால்தான் பி.சி.ஜி தடுப்பூசி கொரோனா வைரஸ்க்கு எதிரான பாதுகாப்பை வழங்க முடியுமா என்பதைப் பார்ப்பது நியாயமானதே என்று டொராண்டோ பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்புத் துறை பேராசிரியர் எலினோர் ஃபிஷ் கூறினார். எனினும் இந்த ஆய்வை மேற்கொண்ட ஒடாசுவின் ஆய்வுகளை இன்னும் சக விஞ்ஞானிகள் மதிப்பாய்வு செய்யவில்லை. இவரது ஆய்வு அறிவியல் ஆய்வுகளுக்கான கடுமையான அளவுகோலாக உள்ளது.
பிரிட்டனில் சோதனை
இந்த ஆய்வு ஒருபுறம் எனில் பிரிட்டன், நெதர்லாந்து, கிரிஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஆறுக்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மருத்துவர்கள் கொரோனா வைரஸுக்கு எதிராக ஓரளவு பாதுகாப்பை வழங்க முடியுமா என்பதை பரிசோதிப்பதாக 1000க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் மற்றும் வயதானவர்களுக்கு பி.சி.ஜி தடுப்பூசி கொடுத்து சோதித்து வருகிறார்கள்.
குறைந்த செலவில் தடுப்பூசி
இந்த சோதனை முயற்சிகள் வெற்றி பெற்றால் குறைந்த செலவில் சில மாதங்களுக்குள் இந்த தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் 1953ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை 10 முதல் 14 வயதுக்கு உள்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் பிசிஇ எனப்டும் காச நோய் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. ஆனால் காசநோய் பாதிப்பு குறைந்த நிலையில் அதன்பிறகு தடுப்பூசி போடப்படுவது வேகமாக நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் உலக நாடுகள் ஆரம்பித்துள்ளன.