பருவநிலை மாற்றம்.. ஆர்டிக் கடலில் ஐஸ் கட்டி மீது நின்று போராட்டம் நடத்திய இளம் பெண்!
ஆர்டிக் கடலின் நடுவே 18 வயது பெண் ஒருவர், பருவநிலை மாற்றம் குறித்து உலக தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
லண்டன்: பருவநிலை மாற்றம் எதிராக 18 வயது பெண் ஒருவர் ஆர்டிக் கடலின் நடுவே ஐஸ் கட்டிகளின் மேல் நின்றபடி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இயற்கைக்கு எதிரான மனிதர்களின் நடவடிக்கையால் பூமியில் மாசு அதிகரித்து, புவியில் வெப்பநிலையும் அதிகரித்து வருகிறது. இதனால் பருவநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக பூமியில் மனிதர்கள் உள்பட எந்த உயிரினங்களும் வாழ முடியாத நிலை உருவாகி வருகிறது.
இங்கிலாந்தை சேர்ந்த 18 வயது பெண்ணான ரோஸ் கிரேக், இயற்கையின் மீதும், சுற்றுச்சுழலின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவர் சிறு வயதில் இருந்தே பருவநிலை மாற்றம், இயற்கையின் அழிவு பற்றி பல்வேறு விழிப்புணர்வு போராட்டங்கள் நடத்தியுள்ளார்.
இந்நிலையில் ரோஸ் கிரேக் பருவநிலை மாற்றத்தால் ஆர்டிக் கடலில் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மிதக்கும் ஐஸ் கட்டிகளின் மீது நின்றபடி போராட்டம் நடத்தினார். அவர் தனது கையில் பதாகை ஒன்றை ஏந்தியிருந்தார். அதில் இயற்கையை பாதுகாக்க உலக தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.