ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு.. 58 வருட சாதனைக்கு அங்கீகாரம்
லண்டன்: ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் என்ற அமைப்புக்கு இவ்வாண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டின் ரோம் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது, இந்த அமைப்பு.
கடந்த சில நாட்களாகவே தினமும் ஒரு பிரிவின்கீழ் நோபல் பரிசுகளை நோபல் பரிசு கமிட்டி அறிவித்து வருகிறது. நேற்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், உலக அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது.
உலக உணவு திட்டம் என்பது உலகின் மிகப்பெரிய மனிதாபிமான அமைப்பாகும்.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு.. அமெரிக்க பெண் கவிஞர் லூயிஸ் க்ளூக் பெறுகிறார்
உலக உணவு திட்டம் வரலாறு
உலக உணவு திட்டம் (WFP), 1961ல் ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. 58 வருடங்களுக்கு மேலாக உலகில் உணவு தேவைப்படுவோருக்கு உணவு வழங்கும் மனிதாபிமான அமைப்பு இதுவாகும். பசியின்மை மற்றும் உணவு பாதுகாப்பை உறுதி செய்வது இந்த அமைப்பின் நோக்கம். 2019 ஆம் ஆண்டில் மட்டும், கடுமையான உணவு பற்றாக்குறை மற்றும் பசியால் பாதிக்கப்பட்டுள்ள 88 நாடுகளில், 10 கோடி மக்களுக்கும் அதிகமானோருக்கு இந்த அமைப்பு உதவியுள்ளது.
ஐ.நா. இலக்கு
பசியை ஒழிப்பது ஐ.நாவின் நிலையான மேம்பாட்டு இலக்குகளில் ஒன்றாக 2015 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இந்த இலக்கை அடைவதற்கான ஐ.நா.வின் முதன்மை கருவிதான் உலக உணவு திட்டம் என்பதாகும்.
கொரோனா பிரச்சினை
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக உலகம் முழுக்க பட்டினி, பசி அதிகரித்துள்ளது. ஏமன், காங்கோ ஜனநாயக குடியரசு, நைஜீரியா, தெற்கு சூடான் மற்றும் புர்கினா பாசோ போன்ற நாடுகளில், வன்முறை மற்றும் கொரோனா ஆகியவை இணைந்து பட்டினியின் விளிம்புக்கு மக்களை தள்ளியுள்ளது.
உணவே தீர்வு
இதைப் பற்றி, உலக உணவு திட்டம் அமைப்பே கூறியது போல், "நம்மிடம் கொரோனாவுக்கு எதிரான மருத்துவ தடுப்பூசி இருக்கும் நாள் வரை, கலகங்களுக்கு எதிரான சிறந்த தடுப்பூசி உணவுதான்." எனவே வன்முறை, பசி, பட்டினி என்ற அனைத்து சமூக அவலங்களுக்குமான தீர்வாக உணவு பார்க்கப்படுகிறது. அப்படி உணவை வழங்கும் ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.