டிஎன்ஏவில் 'கத்திரி' போட்டு மாற்றம் செய்து சாதனை: 2 பெண் விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு
லண்டன்: 2020ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 2 பெண் விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இமானுவேல் சார்பென்டியர், அமெரிக்காவின் ஜெனிஃபர் ஏ டவுட்னா பரிசு பெறுகிறார்கள். ஸ்வீடன் தலைநகர், ஸ்டோக்ஹோம் நகரில், இன்று இந்த அறிவிப்பை நோபல் பரிசுக்கான வேதியியல் குழு வெளியிட்டது.
மரபணு சார்ந்த ஆராய்ச்சிக்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மரபணு செல்களை துண்டித்து சேர்க்கும் ஆய்வில், இவ்விரு விஞ்ஞானிகளும் வெற்றி பெற்றுள்ளனர்.
3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு.. பிளாக் ஹோல் பற்றிய கண்டுபிடிப்புக்காக அறிவிப்பு
இந்த ஆய்வின் மூலம், புற்றுநோய் சிகிச்சையில், ஒரு மைல்கல் எட்டப்பட்டுள்ளது. புற்றுநோய் சிகிச்சையில், இனி அளப்பறிய முன்னேற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், பரம்பரையாக வரும் நோய்களைக் குணப்படுத்துதல், தடுத்தல் போன்றவற்றில், இந்த ஆய்வு பலன்களை கொடுக்க கூடும்.
நோபல் பரிசு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், இமானுவேல் சார்பென்டியர், ஜெனிஃபர் ஏ டவுட்னா ஆகியோர் 2012ல் CRISPR / Cas9 மரபணு எடிட்டிங்கை கண்டுபிடித்ததிலிருந்து அவற்றின் பயன்பாடு பரவலாகியுள்ளது. மரபணு திருத்தம், வாழ்க்கைக்கான விஞ்ஞானத்தை ஒரு புதிய சகாப்தத்திற்கு கொண்டு சென்றுள்ளது. மேலும் பல வழிகளில், மனிதகுலத்திற்கு மிகப்பெரிய நன்மையை தருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.