40 வருட பந்தம் முறிந்தது.. ஐரோப்ப யூனியனிலிருந்து வெளியேறியது பிரிட்டன்.. சாதித்த போரிஸ்.. இனி என்ன?
லண்டன்: ஐரோப்பா யூனியனில் இருந்து பிரிட்டன் வெற்றிகரமாக வெளியேறி உள்ளது. ஐரோப்பா யூனியனின் நாடாளுமன்றத்தில் இருந்து நேற்று பிரிட்டன் கொடி அகற்றப்பட்டது.
கிட்டத்தட்ட 40 வருடத்திற்கும் மேலான உறவு முடிவிற்கு வந்துள்ளது. ஆம், ஐரோப்ப யூனியனில் இருந்து பிரிட்டன் மொத்தமாக வெளியே வந்துள்ளது. கடந்த 4 வருடங்களாக பிரிக்சிட் பிரச்சனை, அந்நாட்டு பொருளாதாரத்தை சுற்றி வந்தது.
தற்போது அனைத்து பிரச்சனைகளுக்கும் முடிவு கட்டும் வகையில் இந்த டைவர்ஸ் நிகழ்ந்து இருக்கிறது. ஆம், கணவன் - மனைவி டைவர்ஸ் இணையாகத்தான் இந்த பிரிக்சிட் பார்க்கப்படுகிறது. இது உலக அளவில் நிறைய பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
நிறைவேறவில்லை
பிரிட்டன் பாராளுமன்றத்தில், ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் பிரிந்து செல்ல வேண்டும் என்று ஜூன் 2016ல் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கான மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் அரசியல் காரணங்களால் நிறைவேற்றப்படாமல் இருந்தது. இதன் காரணமாகத்தான் கடந்த மே மாதம் முன் பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து தெரசா மே விலகினார். ஐரோப்பா யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என்று அங்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தது. இதற்கான பிரிக்சிட் மசோதாவை தெரசா மே தாக்கல் செய்தார்.
ஆதரவு இல்லை
ஆனால் அவரின் மசோதாவிற்கு சொந்த கட்சி எம்பிக்களே ஆதரவு அளிக்கவில்லை. இதனால் அந்த மசோதா தோல்வியில் முடிந்தது.இந்த தோல்விக்கு பொறுப்பேற்று தெரசா மே தனது பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதனால் அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன் பிரதமர் ஆனார். ஆனால் இவராலும் பிரக்சிட் மசோதாவை தாக்கல் செய்து அதை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் தனது ஆதரவு எம்பிக்களை அவைக்கு கொண்டு வரும் வகையில், மொத்தமாக பொது தேர்தலுக்கு போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்தார்.
தேர்தல் வெற்றி
அதன்பின் தேர்தலை சந்தித்து இவர் தேர்தலிலும் வெற்றியை பெற்றார். இந்த தேர்தல் வெற்றி பிரிக்சிட்டை சாத்தியம் ஆக்கியது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பெரும்பான்மை இருக்கிறது. பொதுத்தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி அபாரமாக வென்றது. இந்த நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பிரிக்சிட் வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் வென்றார். கடந்த ஜனவரி 10ம் தேதி இந்த வெற்றி சாத்தியம் ஆனது. அதன் பின் கடந்த வியாழக்கிழமை, இந்த வெளியேற்றம் உறுதி செய்யப்பட்டது.
சாத்தியம் ஆனது
ஐரோப்பா யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் என்ற மசோதாவிற்கு ஆதரவாக 330 பேர் வாக்களித்தனர். எதிராக 231 பேர் வாக்களித்தனர். இந்த மசோதா இனி ஹவுஸ் ஆப் லார்ட்ஸ் எனப்படும் கீழவையில் நிறைவேற்றப்பட்டது. அங்கும் போரிஸ் ஜான்சனுக்கு பெரும்பான்மை உள்ளது. இதனால் தற்போது பிரிட்டன் ஐரோப்பாவில் இருந்து வெளியேறி உள்ளது. நேற்று ஐரோப்ப நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து பிரிட்டன் கொடி நீக்கப்பட்டது.
என்ன மாற்றம்
அந்த நாட்டின் பல வருட கோரிக்கை இதனால் நிறைவேறி உள்ளது. இதனால் அந்நாட்டில் நிறைய பொருளாதார மாற்றங்கள் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இந்த வருடம் டிசம்பர் இறுதி வரை பிரிட்டன் ஐரோப்பா யூனியன் உடன் பொருளாதார ரீதியான நிலைப்பாட்டை தொடரும். அரசியல் உறவு மட்டுமே துண்டிக்கப்படும். இரண்டு தரப்பின் பொருளாதார நிலை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2020 டிசம்பர்க்குள் பிரிட்டன் எப்போது முற்றிலுமாக வெளியேற நினைத்தாலும் வெளியேறலாம்.
வாய்ப்பு
அதுவரை இரண்டு நாடுகளும் உறவை தொடரும். ஆனால் அரசியல் ரீதியாக ஐரோப்பா பாராளுமன்றத்தில் பிரிட்டன் இருக்காது. அங்கு பிரிட்டன் வாக்களிக்க முடியாது. பொருளாதார ரீதியாகவும் பிரிட்டன் நீண்ட நாட்களுக்கு இதில் இருக்காது. இன்னும் இரண்டு மாதங்களில் பிரிட்டனை மொத்தமாக தனியாக போரிஸ் ஜான்சன் பிரித்து சென்று விடுவார் என்று கூறுகிறார்கள். இது உலகம் முழுக்க இருக்கும் பிரிட்டன் நிறுவனங்களை பெரிய அளவில் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.