லண்டனில் தவிக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்கள்... விமானசேவை இல்லாததால் பரிதவிக்கும் உறவுகள்
லண்டன்: இங்கிலாந்தில் வசிக்கக் கூடிய தமிழர்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழகம் திரும்ப பதிவு செய்துள்ள நிலையில், விமான சேவை இல்லாததால் அவர்கள் அனைவரும் பரிதவித்து வருகின்றனர்.
லண்டனில் இருந்து மும்பை, டெல்லி, ஹைதராபாத், உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்கள் பலவற்றுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்படும் சூழலில் அந்த பட்டியலில் சென்னை மட்டும் இடம்பெறவில்லை என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மனைவி, குழந்தைகள், வயதான பெற்றோர் என பலரையும் பிரிந்துள்ள அவர்கள், மத்திய மாநில அரசுகள் தங்கள் மீது கருணைக்காட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர்.
அப்பாவுக்கு கொரோனா.. சிசிச்சைக்காக துடித்த மகள்.. அதற்குள்ளாகவே மரணமடைந்த பரிதாபம்!
சிக்கித்தவிப்பு
கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தால் உலக அளவில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்பமுடியாமல் தவிப்பதை அறிந்த மத்திய அரசு, அவர்களை மீட்பதற்காக வந்தேபாரத் எனும் திட்டத்தின் கீழ் சிறப்பு மீட்பு விமானங்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் லண்டனில் உள்ள தமிழர்களை மீட்பதற்காக பேஸ் ஒன்றில் கடந்த மே 14-ம் தேதி சென்னைக்கு சிறப்பு விமானம் இயக்கப்பட்டது. அதில் முதற்கட்டமாக சுமார் 300 பேர் வரை தாயகம் வந்தடைந்தனர்.
சேவை நிறுத்தம்
லண்டனில் இருந்து தமிழகம் திரும்புவதற்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் முறையாக பதிவு செய்துள்ள நிலையில், அவர்களை மீட்பதற்காக இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்டமாக இயக்கப்பட வேண்டிய விமானங்கள் இயக்கப்படவில்லை. திடீரென மீட்பு விமான சேவை நிறுத்தப்பட்டதால் அங்கு வசிக்கும் தமிழர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி, துயர நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தியாவின் மற்ற நகரங்களுக்கு லண்டனில் இருந்து இயக்கப்படும் மீட்பு விமானங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் பயணிக்க முடியாத நிலை உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குழந்தைகள் சென்னையில்
இதனிடையே இது தொடர்பாக நம்மிடம் பேசிய ஷோபனா ராஜேஷ் என்பவர், '' கடந்த பிப்ரவரி மாதம் மென்பொறியாளர் பணியில் சேருவதற்காக லண்டன் வந்தேன். நான் இங்கு வந்த சில நாட்களில் சென்னையில் உள்ள எனது கணவரையும், குழந்தைகளையும் அழைத்து வர திட்டமிட்டிருந்தேன். அதற்கான விசாவை கூட அனுப்பி வைத்தேன். ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் தாக்கத்தால் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. அவர்களால் லண்டன் வர முடியவில்லை, நானும் சென்னை வரமுடியவில்லை.
2 வயது, 4 வயது என எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களை பார்க்காமல் இருக்கமுடியவில்லை. இதனால் எனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊர் திரும்புவதற்காக காத்திருக்கிறேன்.'' இவ்வாறு அவர் நம்மிடம் கூறிக்கொண்டு இருந்தபோதே அவர் குரல் தழுதழுத்தது.
தவிப்பில் மகள்
இதேபோல் இங்கிலாந்தின் ஷெஃப்பீல்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிப்பதற்காக சென்ற முகிலா நம்மிடம் பேசுகையில், '' நான் கடந்த ஜனவரி 10-ம் தேதி லண்டன் வந்தேன். இங்கு எம்.பி.ஏ. படிப்பதற்காக வந்துள்ள நிலையில் எனது தந்தைக்கு புற்றுநோய் இருக்கும் தகவல் கடந்த வாரம் தான் சோதனை மூலம் தெரியவந்தது. இப்போது அப்பா கோவையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை அம்மா மட்டும் தான் உடனிருந்து பார்த்துக்கொள்கிறார். இப்போது கொரோனா காலம் என்பதால் உறவினர்களையும் குறை சொல்ல முடியாது. ஆகையால், ஊர் திரும்பி அப்பாவை அருகில் இருந்து கவனித்துக்கொள்ள மனம் துடிக்கிறது. ஆனால் விமானசேவை இல்லாதது பெரும் துயரமாக உள்ளது'', என வேதனை தெரிவித்தார்.
அரசுக்கு கோரிக்கை
இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு லண்டனில் இருந்து மீட்பு விமானங்கள் இயக்கப்படுவதை போல் தமிழகத்திற்கும் இயக்க வேண்டும் என்றும், இது குறித்து தமிழக அரசும், மத்திய அரசும் கவனத்தில் கொண்டு தங்களை மீட்க வேண்டும் எனவும் உருக்கமாக கோரிக்கை விடுத்திருக்கிறார் லண்டன் வாழ் தமிழரான செல்வக்குமார்.