3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு.. பிளாக் ஹோல் பற்றிய கண்டுபிடிப்புக்காக அறிவிப்பு
லண்டன்: பிளாக் ஹோல் (கருந்துளை) பற்றிய ஆய்வு முடிவுகளுக்காக மூன்று விஞ்ஞானிகளுக்கு 2020ம் ஆண்டின், இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோஜர் பென்ரோஸ் (பிரிட்டன்), ரெய்ன்ஹார்ட் ஜென்செல் (ஜெர்மனி) மற்றும் ஆண்ட்ரியா கெஸ் (அமெரிக்கா) ஆகியோர் நோபல் பரிசை பகிர்கிறார்கள். இவர்களுக்கு, 24 864,200 பவுண்ட் பரிசுத் தொகை கிடைக்கும்.
இயற்பியல் நோபல் பரிசுக் குழுவின் தலைவரான டேவிட் ஹவிலண்ட், ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோம் நகரில், இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டு பேசுகையில், இந்த ஆண்டு விருது "பிரபஞ்சத்தின் மிகவும் கவர்ச்சியான பொருட்களில் ஒன்றை பற்றியது" என்று தெரிவித்தார்.
ஆம்.. உலகின் பல மக்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் பிளாக் ஹோல் கோட்பாடு பற்றிய ஆய்வுகளில் இம்மூவரின் பங்களிப்பு அபாரமானது என்பதால், டேவிட் ஹவிலண்ட் குறிப்பிட்ட முன்னுரை மிகவும் பொருத்தமானதுதான்.
பிளாக் ஹோல்கள் என்பது, விஞ்ஞானி ஆல்பர்ட்டின் ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாட்டின், தவிர்க்க முடியாத விளைவு என்பதை ரோஜர் பென்ரோஸ் நிரூபித்தார்.
ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு என்னவென்றால், பூமியைச் சுற்றியுள்ள விண்வெளியின் நேரம் கிரகத்தின் சுழற்சியால் திசை திருப்பப்படும் என்பதுதான். பெரிய பொருள்கள் விண்வெளி நேரத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன, இது ஈர்ப்பு விசையாக உணரப்படுகிறது என்று ஐன்ஸ்டீன் தனது ஆய்வில் தெரிவித்திருந்தார்.
ரெய்ன்ஹார்ட் ஜென்செல் மற்றும் ஆண்ட்ரியா கெஸ் ஆகியோர் நமது விண்மீனின் மையத்தில் பால்வெளியில் அமைந்து உள்ள அதிசயமான கருந்துளைக்கு மேலும் உறுதியான ஆதாரங்களை வழங்கினர்.
Sagittarius A என அழைக்கப்படும் பிரமாண்டமான பொருள் (கருந்துளை), பால்வெளியின் மையத்தில் இருந்தபடி, அதைச் சுற்றி வரும் நட்சத்திரங்களை இழுத்து விடுவதை இவர்கள் உறுதி செய்தனர். பிளாக் ஹோல் குறித்த ஆதாரப்பூர்வ ஆவணமாக இந்த கோட்பாடு பார்க்கப்படுகிறது. எனவே இம்மூவரும் இயற்பியலுக்கான நோபல் பரிசை வெல்கிறார்கள்.