5 நாட்கள்.. நாய் உணவுதான் சாப்பாடு.. ருசியை சரியாகச் சொன்னால் ரூ. 5 லட்சம் பரிசு!
நாய் உணவை ஐந்து நாட்கள் சாப்பிட்டு அதன் ருசியைக் கூறுபவர்களுக்கு ரூ. 5 லட்சம் தரப்படும் என இங்கிலாந்து நிறுவனம் அறிவித்துள்ளது.
லண்டன்: இங்கிலாந்து நிறுவனம் ஒன்று தாங்கள் தயாரித்துள்ள நாய் உணவை ஐந்து நாட்களுக்கு சாப்பிட்டால், ரூ. 5 லட்சம் தரப்படும் என்ற வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வீட்டில் மீந்த சாப்பாட்டை செல்லப்பிராணிகளுக்கு போடும் இதே உலகில்தான், தங்களுக்கு வாங்குவதைப் போலவே செல்லப்பிராணிகளுக்கும் தனியாக உணவு வாங்குபவர்கள் இருக்கிறார்கள். இதனாலேயே செல்லப்பிராணிகளுக்கு என சிறப்பு உணவைத் தயாரிக்கும் நிறுவனங்களும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.
நாய் உணவை டேஸ்ட் பார்த்து சொன்னால் ரூ.5 லட்சம்.. சோறு போட்டு கை நிறைய சம்பளமும் கொடுக்கும் நிறுவனம்!
அப்படிப்பட்ட நிறுவனங்களில் ஒன்றுதான் இங்கிலாந்தில் உள்ள ஆம்னி எனும் நிறுவனம். இது நாய்களுக்கென சிறப்பு உணவைத் தயாரித்து வருகிறது.
நாய் உணவு
இனிப்பு, உருளைக்கிழங்குகள், பூசணிக்காய், பருப்புகள், காய்கறி மற்றும் பழுப்பு அரிசி ஆகியவற்றை சேர்த்து, தாவரங்களைக் கொண்டு நாய்களுக்கான உணவு தயாரித்துள்ளது அந்த நிறுவனம். இந்த உணவை ஐந்து நாட்களுக்குச் சாப்பிட்டு, அதன் சரியான விபரங்களைத் தருபவர்களுக்கு ரூ. 5 லட்சம் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வாமை கூடாது
இந்த பணிக்கு வருபவர்கள் நாய் உணவை உண்டால் எந்த ஒவ்வாமையும் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்தினால் மட்டுமே பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஒருவேளை ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில், அது குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். தேர்வு செய்யப்படும் நபர் ஐந்து நாட்களுக்கு இந்த உணவை சாப்பிட வேண்டும்.
நிபந்தனை
பிறகு நாய் உணவின் சுவை எப்படி இருந்தது, அந்த உணவை எடுத்துக் கொண்ட பின் அவரது மனநிலை எப்படி இருந்தது? ஆற்றல் எந்தளவுக்கு கிடைத்தது என்பது போன்ற தகவல்களைத் தெரிவிக்க வேண்டும். இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்களாகவும், 18 வயது நிரம்பியவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதுதான் காரணம்
சரி, நாய் உணவை ஏன் மனிதர்களுக்கு கொடுத்து சோதிக்கிறார்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். அதுக்கும் ஒரு காரணம் வைத்திருக்கிறது அந்த நிறுவனம். அதாவது தங்களது தயாரிப்பு நாய்களுக்கானது மட்டுமல்ல.. மனிதர்களும் ருசித்து சாப்பிடும் அளவிற்கு சுவையானதும்கூட.. அதோடு அதனை மனிதர்கள் சாப்பிட்டால் அவர்களுக்கு உடல்நலக்குறைவு எதுவும் நேரிடாது என்பதை நிரூபிப்பதற்காகவே இப்படி ஒரு வேலையை அவர்கள் தருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.