விஜய் மல்லையா முயற்சிக்கு பெரும் அடி.. கைவிட்டது பிரிட்டன் ஹைகோர்ட்
லண்டன்: வங்கி மோசடி மன்னன், விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்று வாழ்க்கை நடத்தி வருகிறார், விஜய் மல்லையா.
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் தொடர் முயற்சியின் பலனாக, வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில், இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. விஜய் மல்லையாவுக்கு எதிரான வாதத்தை ஏற்றுக் கொண்ட, வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம், விஜய் மல்லையாவை நாடு கடத்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில், விஜய் மல்லையா அப்பீல் செய்திருந்தார். இதுகுறித்த விசாரணையில், மல்லையாவின் மேல்முறையீட்டை பிரிட்டன் ஹைகோர்ட் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. எனவே, விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் ஹைகோர்ட்டும் அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லையா அப்பீல் செய்வதுதான் எஞ்சிய ஒரே வழியாகும். அதற்கு இன்னும் 6 வாரங்கள் கால அவகாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.