ஹுவாவேக்கு குட் பை.. சீனாவுக்கு சரியான அடி கொடுத்த பிரிட்டன்.. இந்தியா, அமெரிக்காவோடு கை கோர்த்தது
லண்டன்: இந்தியா, சீனாவின் 59 செல்போன் செயலிகளை தடை செய்தது, அமெரிக்கா சீனாவின் மிகப்பெரிய நிறுவனங்களின் ஒன்றான ஹுவாவே (Huawei) தொலை தொடர்பு நிறுவனத்திற்கு ரெட் கார்டு காட்டியது, இப்போது பிரிட்டனும் இதே வரிசையில் இணைந்துள்ளது.
சீனாவின் நிறுவனங்கள் என்றாலே, பயனாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவாகிவிட்டதுதான் இதற்கு காரணம். தகவல் திருட்டு என்பது சீனாவிற்கு சகஜமான ஒன்று என்பதால், அனைத்து நாடுகளுமே, மிகவும் எச்சரிக்கையை கையில் எடுக்கின்றன.
உலக அளவில் 5 ஜி நெட்வொர்க்தான் இப்போது, வேகமாக வளரும் தொழில்நுட்பம். இந்தியாவிலும் பல மொபைல்கள் 5ஜி தொழில்நுட்பத்தோடு அறிமுகமாக ஆரம்பித்துள்ளன.
5 வருடம் யோசித்த இந்தியா.. தப்பான இடத்தில் கை வைத்து மாட்டிக்கொண்ட சீனா.. கோபத்தில் அமெரிக்கா!
5ஜி நெட்வொர்க்
பிரிட்டனிலும் 5ஜி நெட்வொர்க் தேவை மிக அதிகம். சீனா இதை முன்பே கணித்தது. அந்த நாட்டின் ஹுவாவே நிறுவனம், இந்த தொழில்நுட்பத்தை வழங்குவதில் புகழ் பெற்றது. எனவே பிரிட்டன், ஹுவாவே நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கியது. மேலும், உபகரணங்களை அந்த நிறுவனத்திடமிருந்து வாங்கியது.
ஹுவாவே
இந்த நிலையில், நேற்று, பிரிட்டன் பிரதமர், போரிஸ் ஜான்சன் தலைமையிலான இங்கிலாந்தின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மிக முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இங்கிலாந்தின் 5 ஜி நெட்வொர்க்குகளிலிருந்து ஹுவாவே முற்றிலுமாக அகற்றப்படும் என்று அதில் முடிவு செய்யப்பட்டது.
இந்த வருடத்தோடு ஓவர்
அமெரிக்காவும் ஹுவாவேக்கு தடை விதித்த நிலையில், அதன் தாக்கம் குறித்து நாட்டின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் பரிசீலித்தது. இதன் பின்னர் இங்கிலாந்து அரசு இப்படி ஒரு முடிவை எடுத்தது. மேலும், இங்கிலாந்து நெட்வொர்க்குகளிலிருந்து அனைத்து ஹுவாவே கிட்களையும் (உபகரணங்களை) முழுமையாக அகற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு, எந்த புதிய 5 ஜி உபகரணம் வாங்குவதற்கும் மொத்தமாக தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் தடை
கொரோனா பரவலுக்கு பிறகு, மே மாதத்தில் ஹுவாவே தொலைத் தொடர்பு நிறுவனத்திற்கு எதிரான அமெரிக்கா தடையை விதித்திருந்தது.
"5 ஜி நெட்வொர்க் நம் நாட்டிற்கு தேவையானதாக இருக்கும், ஆனால் அது உள்கட்டமைப்பின் பாதுகாப்பு தொடர்பாக எங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மட்டுமே" என்று டிஜிட்டல், கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத்துறைக்கான இங்கிலாந்து மாநில செயலாளர் ஆலிவர் டவுடன் கூறினார்.
இணைய நிபுணர்கள்
ஹுவாவே நிறுவனத்திற்கு எதிரான அமெரிக்கத் தடைகள் மற்றும் எங்கள் இணைய நிபுணர்களின் தொழில்நுட்ப ஆலோசனைகளை கேட்டு அறிந்து இந்த முடிவை எடுத்துள்ளோம். எங்கள் 5 ஜி நெட்வொர்க்குகளிலிருந்து ஹவாய் தடை செய்ய வேண்டியது அவசியம் என்று அரசு முடிவு செய்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.