உத்தரகண்ட் பனிப்பாறை வெடிப்பு... தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயார்.. பிரிட்டன் பிரதமர் உறுதி
லண்டன்: உத்தரகண்ட் பனிப்பாறை வெடிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரி செய்ய தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாகப் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை திடீரென்று சரிந்து விழுந்தது. இதன் காரணமாக அங்குள்ள தவுலிகங்கா மற்றும் ரிஷிகங்கா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் உயிரிழந்த 14 பேரின் உடல்கள் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளன.
மேலும் மாயமான 100க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வெள்ளப்பெருக்கு மிகக் கடுமையாக உள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் தெரிவித்துள்ளார்.
போரிஸ் ஜான்சன் ட்வீட்
பனிப்பாறை வெடிப்பு காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக தலைவர்கள் பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், "உத்தரகண்டில் பனிப்பாறை வெடிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளவர்கள் குறித்தும், இந்தியா குறித்துமே எனது சிந்தனை உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியாவுடன் பிரிட்டன் துணை நிற்கும்
மேலும், இந்தியாவுடன் பிரிட்டன் துணை நிற்கும் என்றும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாகவும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதேபோல பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோனும், "உத்தரகண்டில் பனிப்பாறை வெடிப்பு காரணமாக மாயமான 100 பேர் மாயமாகியுள்ளனர். எங்கள் சிந்தனை அவர்களைப் பற்றியே உள்ளது" என்று பதிவிட்டிருந்தார்.
12 பேர் மீட்பு
மீட்புப் பணிகளை மேற்கொள்ளத் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், மாநில பேரிடர் மீட்புப் படையினரும் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர், மறுபுறம் இந்தோ திபத் காவல் படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஆற்றின் அருகே அமைந்திருந்த சுரங்கம் ஒன்றில் சிக்கியிருந்த 12 பேரை இந்தோ திபத் காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.
நீர்மின் நிலைய கட்டுமான பணிகள்
அதேபோல தபோவன் அணையின் குறுக்கே சுமார் 3,000 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வந்த விஷ்ணுகாட் நீர்மின் நிலைய கட்டுமானமும் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இந்தக் கட்டுமானத்தில் பணிபுரிந்த சுமார் 125 பேரை காணவில்லை என்று உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார். இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.