ஒரு நிமிடத்தில் 140 பேருக்கு கொரோனா தடுப்பூசி... அதிரடி காட்டும் பிரிட்டன் அரசு
லண்டன்: பிரிட்டன் நாட்டில் ஒரு நிமிடத்திற்குச் சராசரியாக 140 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படுவதாக அந்நாட்டின் தடுப்பூசி விநியோக அமைச்சர் நாதிம் ஜஹாவி தெரிவித்துள்ளார்.
உலகிலேயே கொரோனா வைரஸ் காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் ஐந்தாவது இடத்திலுள்ளது பிரிட்டன். அந்நாட்டில் இதுவரை 33.95 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல சுமார் 89 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. கடந்த நவம்பரில் உருவான புதிய வகை கொரோனா உயிரிழப்பை அதிகப்படுத்தியது.
பிரிட்டன் நம்பிக்கை
தடுப்பூசி விநியோகத்தை விரைவுபடுத்துவதன் மூலமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை தீர்க்கமாக நம்பியது பிரிட்டன் அரசு. ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்களின் தடுப்பூசி ஆராய்ச்சிக்குப் பிரிட்டன் அரசு நிதியுதவி அளித்து வந்தது. அதேபோல கரோனா தடுப்பு மருந்து விநியோகத்தை நிர்வகிக்க அதற்கென தனி அமைச்சகத்தை உருவாக்கி, நாதிம் ஜஹாவி என்பவரை அத்துறையின் அமைச்சராகக் கடந்த நவம்பர் மாதம் பிரிட்டன் அரசு நியமித்தது.
தடுப்பூசிகளுக்கு ஒப்புதல்
மேலும், தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிப்பதிலும் பிரிட்டன் மற்ற நாடுகளைவிட முன்னிலையிலேயே இருந்தது. முதலில் ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்குப் பிரிட்டன் ஒப்புதல் அளித்தது. அதைத்தொடர்ந்து ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்குக் கடந்தாண்டு இறுதியில் அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியது. அந்நாட்டில் கடந்தாண்டு இறுதியில் தடுப்பூசி வழங்கும் பணிகளும் தொடங்கப்பட்டன.
நிமிடத்திற்கு 140 பேருக்குத் தடுப்பூசி
முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கும் வயதானவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் இதுவரை 38.57 லட்சம் பேருத்து தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல 4.49 லட்சம் பேருக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டின் தடுப்பூசி விநியோக அமைச்சர் நாதிம் ஜஹாவி கூறுகையில், "தற்போது வரை தடுப்பூசி செலுத்தும் பணிகள் சிறப்பாக உள்ளது. சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 140 பேருக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது. சில பகுதிகளில் இதைவிட விரைவாகவும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறுகிறது.
தடுப்பூசி வழங்கும் திட்டம்
தடுப்பூசி வழங்கும் பணிகளை மேலும் வேகப்படுத்தக் கூடுதல் தடுப்பூசி வழங்கும் மையங்களையும் ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்த வார இறுதியில் கூடுதலாக 17 மையங்களையும், மாத இறுதிக்குள் 50 மையங்களையும் ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். 80 வயதைக் கடந்த பெரும்பாலானோருக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடிந்துவிட்டது. அடுத்தகட்டமாக 70 வயதைக் கடந்தவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த உள்ளோம்" என்றார்.
அடுத்தகட்ட திட்டம்
அடுத்த கட்டமாக 50 வயதைக் கடந்த அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப் பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது. 50 வயதைக் கடந்தவர்களுக்குத் தடுப்பூசி வழங்கும் பணிகள் முடிந்தவுடன், ஆசிரியர்கள், காவல் துறையினர், கடை உரிமையாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசிகளைச் செலுத்தப் பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது.