எட்டாக்கனியான பிரெக்ஸிட் ஒப்பந்தம்.. பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த தெரசா மே
லண்டன்: ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற அனுமதி கோரிய பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை, கடைசி வரை நிறைவேற்ற முடியாததால் தாம் சொன்னபடி பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் தெரசா மே.
ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த 28 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனில், கடந்த 1973 முதல் பிரிட்டன் உள்ளது. இந்த கூட்டமைப்பில் இணைந்ததால், பிரிட்டன் தனது தனித்துவத்தையும், இறையாண்மையையும் இழந்துவிட்டதாக பரவலாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
ஐரோப்பிய யூனியனானது அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்காக ஆஸ்திரேலியா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், கிரீஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் பிரிட்டன் உட்பட 28 நாடுகள் இணைந்து உருவாக்கப்பட்டது. ஐரோப்பிய யூனியனில் இணைந்த நாடுகள் குடியேற்ற விஷயத்தில் தாராள போக்கை கடைப்பிடித்தன.
இந்த தாராள போக்கால் தங்கள் நாட்டில் கலாசாரம், பொருளாதாரம் மோசமடைந்துள்ளதாக பிரிட்டன் மக்கள் கருதினர். இதனையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு பிரிட்டன் மக்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், பெரும்பாலான மக்கள் பிரிட்டன் ஐரோப்பிய யூனியிலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த வாக்கெடுப்பு முடிவை அடுத்து ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது என பிரெக்ஸிட் ஒப்பந்தம் போட்டப்பட்டது. ஆனால் பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை, அந்நாட்டு எம்.பி.க்கள் ஏற்கவில்லை. பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற தெரசா மே இதுவரை 3 முறை முயற்சி செய்தார்.
இன்னும் 3 வாரம்தான்.. மாயமான முகிலன் பற்றி முழு தகவலும் வெளியே வரப்போகிறது!
ஆனால் 3 முறையுமே பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் ஒப்பந்தம் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தெரசா மேவின் தொடர் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு, தெரிவித்து பல முக்கிய அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதனால் பிரதமர் மற்றும் ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்து தெரசா மே விலக வேண்டும் என்ற நெருக்கடி அதிகரித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தெரசா மே, கடந்த மாதம் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, பிரிட்டன் மக்களவையில் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற இயலவில்லை என கண்ணீர் மல்க பேசினார்.
இதனால் நான் கனசர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியை வரும் ஜூன் 7-ல் ராஜினாமா செய்கிறேன் என உணர்ச்சிப்பூர்வமாக அறிவித்தார். மேலும் பிரிட்டன் பிரதமராக 2 முறை பணியாற்றியதை தம் வாழ்நாள் கவுரவமாக கருதுவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் பிரெக்ஸிட் ஒப்பந்தம் கானல் நீராகிவிட்டதால், தாம் சொன்னபடி பிரதமர் பதவியை ஜூன் 7-ம் தேதியான இன்று ராஜினாமா செய்துள்ளார். கனசர்வேட்டிவ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் வரை தெரசா மே பிரதமராக நீடிப்பார். ஏனெனில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர்கள் தான், பிரிட்டனின் பிரதமராக பதவியேற்பர் என்பது குறிப்பிடத்தக்கது.