குட் நியூஸ்... உருமாறிய கொரோனாவுக்கு எதிராக வெறும் சில நிமிடங்களில் தடுப்பு மருந்தைத் தயாரிக்கலாம்
லண்டன்: உருமாறியுள்ள புதிய வகை கொரோனா வைரசுக்கு எதிராகச் செயல்படும் வகையில் தடுப்பு மருந்தை வெறும் சில நிமிடங்களில் மாற்ற முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால் வைரஸ் பரவல் படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாகப் பிரிட்டன் நாட்டில் வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்தது. இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் புதிய வகை கொரோனாவை கண்டுபிடித்தனர்.
தீயாகப் பரவும் புதிய வகை கொரோனா
இந்தப் புதிய வகை கொரோனா வைரஸ் மற்ற வகைகளைவிட வேகமாகப் பரவுவதால் உயிரிழப்பு விகிதம் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த உருமாறிய கொரோனா வைரஸ் ஏற்கனவே ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வட அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன.
தடுப்பு மருந்து வேலை செய்யுமா?
இந்தப் புதிய வகை கொரோனாவுக்கு எதிராக தற்போதுள்ள தடுப்பு மருந்துகள் வேலை செய்யுமா என்ற அச்சமும் மக்களிடையே நிலவியது. இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், "இதுவரை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தடுப்பு மருந்துகளும் புதிய வகை கொரோனாவுக்கு எதிராகவும் வேலை செய்யும். வைரஸ் தொடர்ந்து தன்னை தானே மாற்றிக்கொண்டிருந்தாலும், அதற்கு ஏற்ப நமது தடுப்பு மருந்துகளையும் மாற்றலாம்" என்று தெரிவித்துள்ளனர்.
சில நிமிடங்கள் போதும்
இது குறித்து பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ட்ரூ வெய்ஸ்மேன் கூறுகையில், "வைரஸ் இவ்வாறு தன்னைதானே மாற்றிக்கொள்வது இயல்பான ஒன்றுதான். நமது தடுப்பு மருந்துகளில் புதிய கொரோனா வகைகளுக்குத் தேவையான மாற்றங்களை நிமிடங்களில் செய்ய முடியும். அது மிகவும் எளிய நடைமுறைதான்" என்றார்.
புதிய கொரோனாவுக்கான தடுப்பு மருந்து தாமதமாகலாம்
மேலும், அவர் கூறுகையில், "உற்பத்தி, அனுமதி உள்ளிட்ட சிக்கல்கள் இருப்பதால் அவ்வாறு மாற்றியமைக்கப்படும் தடுப்பு மருந்தின் விநியோகம் தொடங்க சில காலம் ஆகலாம், ஏன் மாதங்கள்கூட ஆகலாம். இந்தப் புதிய தடுப்பு மருந்துகளை இப்போது இருக்கும் தடுப்பு மருந்துகளைவிடச் சற்று மாற்றியமைக்கப்பட்டு இருக்கும். ஆனாலும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஆணையம் மீண்டும் முழு அளவிலான மருத்துவ பரிசோதனைகளை நடத்த கோரும்" என்றார்.
பிரிட்டனில் கண்டறியப்பட்ட தென் ஆப்பிரிக்க வகை கொரோனா
இதேபோல தென் ஆப்பிரிக்காவிலும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொரோனா வகை தற்போது பிரிட்டனுக்கும் பரவியுள்ளது. இது குறித்து பிரிட்டிஷ் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் கூறுகையில், "தென் ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வகை இங்கிலாந்தில் இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வகை ஏற்கனவே நம் நாட்டில் பரவும் கொரோனா வகையைவிட வேகமாகப் பரவக் கூடியது" என்றார்.
அச்சப்படத் தேவையில்லை
இது குறித்து மேலும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், "இத்தகைய எச்சரிக்கைகள் பீதியைத் தூண்டும் வகையில் இருக்கக் கூடாது, வைரசில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் அதன் தீவிரதன்மையை அதிகப்படுத்தியுள்ளனவா அல்லது குறைத்துள்ளதா என்பது நமக்கு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த வகைகள் குறித்த ஆராய்ச்சி ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. இந்த விஷயத்தில் இது மிகவும் விரிவான ஆராய்ச்சிகள் தேவை" என்று தெரிவித்துள்ளனர்.
புதிய வகை கொரோனா
பொதுவாக அனைத்து வகையான வைரஸ்களை சுற்றிலும் புரதச்சத்து இருக்கும். இதை வைத்தே வைரஸ்கள் மனிதர்களின் உடலில் நுழையும்.. இப்போது இந்த புரதச்சத்து இருக்கும் வடிவத்திலேயே மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் மாற்றம் காரணமாக வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இருப்பினும், பொதுமக்கள் சரியான முறையில் மாஸ்க்குகளை அணிந்தாலேயே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.