உருமாறிய கொரோனா வகைகள்... தடுப்பூசி வேலை செய்யாமல் போகலாம்... பிரிட்டன் அமைச்சர் எச்சரிக்கை
லண்டன்: உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராகத் தடுப்பூசி வேலை செய்யாமல் போகலாம் என்று பிரிட்டன் சுகாதார துறை அமைச்சர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில், தடுப்பூசிகளே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வழியாகப் பார்க்கப்படுகிறது. பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் தொடங்கிவிட்டன.
அதேநேரம் பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளிலும் புதிய உருமாறிய கொரோனா வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த உருமாறிய கொரோனா வகை தடுப்பூசிகளுக்குக் கட்டுப்படுமா என்பது குறித்து இதுவரை தெளிவான ஆய்வு முடிவுகள் வெளியாகவில்லை.
வேலை செய்யாமல் போகலாம்
இந்நிலையில், ஸ்கை செய்தி நிறுவனத்திற்குப் பிரிட்டன் சுகாதார துறை அமைச்சர் மாட் ஹான்காக் பேட்டியளித்திருந்தார். அதில் பேசிய அவர், "தென்னாப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா வகைகள் தடுப்பூசி முழுமையாகக் கட்டுப்படாமல் போகலாம். இந்த உருமாறிய கொரோனாக்களுக்கு எதிராக தடுப்பூசி எவ்வளவு தூரம் பலனளிக்கும் என்று நமக்கு இதுவரை தெளிவாக தெரியவில்லை. தென்னாப்பிரிக்க கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி வேலை செய்கிறதா என்பது குறித்த ஆய்வு தற்போது பிரிட்டனில் நடைபெறுகிறது" என்றார்.
பயணக் கட்டுப்பாடு ஏன்
பிரிட்டனில் உருமாறிய கொரோனா வேகமாகப் பரவுவதாலேயே ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையில், புதிய உருமாறிய கொரோனா வகைகள் பிரிட்டன் நாட்டில் நுழைவதைத் தடுக்கவே பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், "நாம் இப்போது சில உருமாறிய கொரோனா வகைகளை கண்டறிந்துள்ளோம். ஆனால், இங்கு கண்டறியப்படாமல் பல கொரோனா வகைகள் இருக்கலாம். அவைதான் மிகவும் ஆபத்தானது" என்றார்.
தடுப்பூசி செலுத்தும் பணிகள்
பிரிட்டன் நாட்டில் நடைபெற்று வரும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்துப் பேசிய அவர், "தற்போதுவரை பிரிட்டனில் 50 லட்சத்திற்கும் அதிகமானோருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 80 வயதைக் கடந்தவர்களில் நான்கில் மூன்று பங்கு மக்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது" என்றார். பிரிட்டன் நாட்டில் தற்போதுவரை ஃபைசர், மாடர்னா மற்றும் ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்களின் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
கொரோனா பரவல் காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகப் பிரிட்டன் உள்ளது. இங்குக் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா மற்ற வகைகளைவிட 70% வேகமாகப் பரவிவருகிறது. இதன் காரணமாகக் கடந்த டிசம்பர் முதல் அங்கு ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு ஜூன் மாதம் வரை நீடிக்கப்படலாம் என்று கடந்த சில நாட்களுக்கு முன் அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார்.