நாடு கடத்தல் உத்தரவுக்கு எதிராக விஜய் மல்லையா அப்பீல்.. இந்திய அரசு முயற்சிக்கு முட்டுக்கட்டை
லண்டன்: இந்தியாவிற்கு நாடு கடத்த உத்தரவிட்ட லண்டன் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய தொழில் அதிபர் விஜய் மல்லையா முடிவு செய்துள்ளார்.
தொழில் அதிபர் விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு அனுமதி அளித்து, லண்டன் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, 'அப்பீல்' செய்ய உள்ளதாக, அவரது வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
இந்தியாவிலுள்ள பல்வேறு வங்கிகளில், ரூ.9,000 கோடி அளவுக்கு கடன் வாங்கி, அவற்றை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்துவிட்டதாக வங்கிகள் அளித்த புகாரின் பேரில் விஜய் மல்லையா மீது வழக்குகள் தொடரப்பட்டன.
இதையடுத்து, லண்டன் நகருக்கு, மல்லையா தப்பிச் சென்றார். அவரை இந்தியா கொண்டு வந்து, விசாரணைக்கு உட்படுத்தும் வகையில் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
விசாரணை நடத்திய நீதிமன்றம், மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த சில நாட்கள் முன்பாக அனுமதி அளித்தது. இந்த உத்தரவை ஏற்று அனுமதி வழங்குமாறு, பிரிட்டன் உள்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து, லண்டன் உயர் நீதிமன்றத்தில் மல்லையா மேல்முறையீடு செய்ய உள்ளதாக, அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். எனவே உயர் நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை வைத்தே மல்லையா நாடு கடத்தப்படுவாரா இல்லையா என்பது தெரியவரும்.