இப்போ இல்ல… 18 மாசம் ஆகும் மல்லையாவை இந்தியா கொண்டு வர!! வெளியான புதிய தகவல்
Recommended Video
லண்டன்: மல்லையாவை நாடு கடத்த லண்டன் உள்துறை அனுமதி வழங்கி இருந்தாலும் அவரை இந்தியா கொண்டு வர, ஒன்றரை ஆண்டுகளாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழிலதிபரான மல்லையா தற்போது லண்டனில் வசித்து வருகிறார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
பெரும் போராட்டத்துக்கு பின்னர், மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்துறை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கு எதிராக நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய மல்லையாவுக்கு இங்கிலாந்து 14 நாட்கள் அவகாசமும் வழங்கியுள்ளது.
இது குறித்து டுவிட்டரில் பதில் கூறியுள்ள மல்லையா, நிச்சயமாக மேல் முறையீடு செய்ய போவதாக அறிவித்துள்ளார். அவரின் மேல் முறையீடு உறுதியாகி உள்ளதால், எப்போது மல்லையா இந்தியா கொண்டு வரப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆனால்... அனைத்து சட்ட நடைமுறைகளும் நிறைவடைந்து மல்லையாவை இந்தியா கொண்டு வருவது அவ்வளவு லேசுபட்ட காரியமாக தெரியவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏனெனில், மேல்முறையீடு செய்ய மல்லையா விண்ணப்பித்த பிறகு, உச்சநீதி மன்ற நீதிபதியிடம் இந்த விவகாரம் குறித்து கேட்கப்படும். அந்த நீதிபதி தனது சம்மதத்தை தெரிவிப்பார்.
அதன்பிறகு, 2 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அவரது வேண்டுகோளை ஏற்பார்கள். இந்த நடவடிக்கைகளுக்கு குறைந்தது 18 மாதங்கள் வரை ஆகலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆக மொத்தம்... மல்லையாவை உடனடியாக இந்தியா கொண்டு வரமுடியாது என்பது தான் நிதர்சனம்.