இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுகிறார் விஜய் மல்லையா.. ஏற்பாடுகள் ரெடி.. தயார் நிலையில் மும்பை சிறை
லண்டன்: பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுகிறார், தொழிலதிபர் விஜய் மல்லையா. அவர் மும்பையிலுள்ள ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் அடைக்கப்பட உள்ளார்.
Recommended Video
17 வெவ்வேறு வங்கிகளில் சுமார் ரூ .9,000 கோடி அளவுக்கு கடன் மோசடி செய்தவர், பெங்களூரைச் சேர்ந்த, மதுபான தொழிலதிபர் மல்லையா. ஆர்சிபி ஐபிஎல் அணியின் உரிமையாளர் இவரே.
வங்கி மோசடி புகார் வலுத்த நிலையில், இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று தலைமறைவானார் மல்லையா. இங்கிலாந்தின் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நடந்தது.
"பை நிறைய வழிந்த பணம்.. 500 ரூபாய் கட்டு வைக்க இடமே இல்லை".. மிரள வைத்த கோபால்.. பழக்கடை கொள்ளை ஷாக்
சட்டப் போராட்டம்
2017ம் ஆண்டு இந்த வழக்கில் விஜய் மல்லையா இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டு, பின்னர், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்பது இந்திய புலனாய்வு அமைப்புகளின் தீவிர முயற்சியாக இருந்து வருகிறது. இதற்கு எதிராக வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் மட்டுமின்றி இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் வரை முட்டி மோதினார் விஜய் மல்லையா.
நாடு கடத்த சம்மதம்
இருப்பினும் மல்லையா தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த இங்கிலாந்து நீதிமன்றங்கள், அவரை நாடு கடத்த சம்மதிக்கும் வகையிலேயே உத்தரவுகளை பிறப்பித்தன. இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் மல்லையா மேல்முறையீடு செய்த நிலையில் அந்த கடைசி வாய்ப்பையும் அந்நாட்டு உச்ச நீதிமன்றம், கடந்த மே 14ம் தேதி தள்ளுபடி செய்தது.
இந்தியா அழைத்து வரப்படும் விஜய் மல்லையா
இந்த நிலையில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் மல்லையாவை இந்தியா கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. அவர் இன்று மாலையோ, இரவோ, அல்லது நாளையோ, எப்போது வேண்டுமானாலும், இங்கிலாந்திலிருந்து, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார். மல்லையாவுடன், விமானத்தில், மத்திய புலனாய்வுப் பிரிவான சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் வருவார்கள். மும்பை விமான நிலையத்தில், வந்து இறங்கியதும் மருத்துவ குழு அவரது உடல்நிலையை பரிசோதனை செய்யும்.
சிபிஐ அலுவலகம்
மல்லையா இரவில் மும்பையில் இறங்கினால், அவர் அந்த நகரத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தங்க வைக்கப்படுவார். அவர் பிற்பகலில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். அவர் பகலில் வந்திறங்கினால், நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார், அங்கு சிபிஐ அவரைக் காவலில் எடுக்க அனுமதி கோரும். பின்னர் அமலாக்கத்துறையும், அவரை விசாரிக்க அனுமதி கோரும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
மும்பை சிறை
2018 ஆகஸ்டில் மல்லையாவின் மனுவை விசாரித்த இங்கிலாந்து நீதிமன்றம், அவர் இந்தியாவில் அடைக்கப்படும் சிறைச்சாலையின் விவரங்களை பகிர்ந்து கொள்ளுமாறு இந்திய புலனாய்வு அமைப்புகளை கேட்டுக் கொண்டது. மும்பையின் ஆர்தர் சாலை சிறையில் உள்ள அறை வீடியோவை நீதிமன்றத்தில் புலனாய்வு அமைப்புகள் அப்போது சமர்ப்பித்தன. எனவே ஆர்தர் சிறையில்தான் மல்லையா அடைக்கப்பட உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
சிறைச்சாலை பின்னணி
ஆர்தர் சாலை சிறை வளாகத்தில் இரண்டு மாடி கட்டிடத்தில் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு அறைகளில், ஒன்றில் மல்லையாவை அடைக்க சிறைத்துறை திட்டமிட்டுள்ளது. ஆர்தர் சாலை சிறை நிழலுலக தாதாக்கள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் சில மோசமான குற்றவாளிகளை அடைத்து வைக்ப்பட்டிருந்த இடம். 26/11 மும்பை தாக்குதலுக்காக கைது செய்யப்பட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் கசாப் இந்த உயர் பாதுகாப்பு சிறையில்தான் அடைக்கப்பட்டிருந்தார். அபு சலேம், சோட்டா ராஜன், முஸ்தபா தோசா, பீட்டர் முகர்ஜி மற்றும் ரூ .13,500 கோடி வங்கி மோசடி குற்றவாளி விபுல் அம்பானி போன்றோர் அடைக்கப்பட்ட சிறை இதுவாகும்.