இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் அனுமதி.. விஜய் மல்லையா மேல்முறையீடு
லண்டன்: இந்தியாவில் கடன் பெற்றுவிட்டு தப்பி ஓடிய விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் அளித்த அனுமதியை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்யவுள்ளார்.
இந்தியாவில் உள்ள 14-க்கும் மேற்பட்ட வங்கிகளில் ரூ 9000 கோடி கடனை விஜய் மல்லையா பெற்றார். இதையடுத்து அவற்றை திருப்பி செலுத்தாமலேயே லண்டனுக்கு தப்பி ஓடினார்.
அவரை இந்தியாவுக்கு அழைத்து வர சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியன முயற்சிகளை மேற்கொண்டது. இந்த நிலையில் விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம் என டிசம்பர் 10-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அது போல் அவரை நாடு கடத்துவது குறித்து பரீசிலனை செய்யவும் அந்நாட்டு உள்துறை அமைச்சகத்துக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க இந்கிலாந்து உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இதை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீடு செய்ய விரும்பினால் 14 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என கால அவகாசம் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்ய போவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.