தயவு செய்து வாங்கிக்கோங்க.. முழு கடனையும் செலுத்தி விடுகிறேன்- விஜய் மல்லையா திடீர் சரண்டர்
லண்டன்: முழு கடனையும் அடைத்து விடுகிறேன். அதைத் திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று வங்கிகளுக்கு விஜய் மல்லையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய வங்கிகளில் ரூ.9000 கோடியை கடனாக பெற்ற விஜய் மல்லையா அக்கடன்களை திரும்ப செலுத்தாமலேயே லண்டனுக்கு தப்பி சென்றுவிட்டார். அவரை நாடு கடத்துவது குறித்து இந்தியா வழக்கு தொடுத்துள்ளது.
இந்த நிலையில் ஒரு வங்கியில் வாங்கிய ரூ.113 கோடி கடனுக்காக லண்டனில் உள்ள அவரது சொகுசு பங்களா ஒன்று ஏலத்துக்கு போவதாக தகவல்கள் கிடைத்தன. இந்நிலையில் தான் பெற்ற கடன் முழுவதையும் அடைத்துவிடுவதாக விஜய் மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களின் பணம்
மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் நான் நாடு கடத்தப்படுவது குறித்து பல செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. அதை சட்டப்பபூர்வமாக நான் எதிர்கொண்டு வருகிறேன். இங்கு முக்கிய விஷயம் மக்களின் வரிப்பணம்.
|
டுவிட்டரில் வேண்டுகோள்
அந்த பணத்தை நான் முழுவதுமாக செலுத்திவிடுகிறேன். வங்கிகளும் அரசும் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
முக்கியத்துவம்
அகஸ்டா வெஸ்ட்லாந்து நிறுவனத்தின் சொகுசு ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இங்கிலாந்தைச் சார்ந்த கிரிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் துபாயிலிருந்து இந்தியாவுக்கு நேற்று நாடு கடத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்த அடுத்த நாளே, தான் பெற்றக் கடனை முழுவதுமாக திரும்பச் செலுத்துவதாகவும் அதை வங்கிகளும் அரசாங்கமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நடவடிக்கை
மேலும் மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி உள்ள மல்லையா, நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி ஆகியோரையும் நாடு கடத்த இந்தியா நடவடிக்கைகளை எடுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது. விஜய் மல்லையா டுவிட்டர் பதிவுக்கு இந்திய அரசு எத்தகைய முடிவு எடுக்கும் என்பது இனிதான் தெரியவரும்.