விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அதிரடி கைது! ஈக்குவெடார் தூதரகத்திற்குள் புகுந்த லண்டன் போலீஸ்
Recommended Video
லண்டன்: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
விக்கிலீக்ஸ் இணையதளத்தில், அமெரிக்காவின் ராணுவம் மற்றும் ராஜாங்க ரகசிய தகவல்கள் பலவற்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே.
இவர் வெளியிட்ட ஆயிரக்கணக்கான ரகசிய தகவல்கள், அமெரிக்காவின் ராஜதந்திர நடவடிக்கைகள் பலவற்றை அம்பலமாக்கியது. சர்வதேச நாடுகள் மத்தியில் அமெரிக்காவின் முகத்திரையை கிழிக்க உதவியது.
விண்வெளியில் ஒரு மாபெரும் அதிசயம்.. முதல் முறையாக வெளியானது கருந்துளை படம்.. மர்மங்களுக்கு விடை
2012 முதல் தஞ்சம்
இந்த நிலையில் ஸ்வீடன் நாட்டில் ஜூலியன் அசாஞ்சே மீது பாலியல் துன்புறுத்தல் புகார் பதிவு செய்யப்பட்டது. இவரை கைது செய்வதற்காக நீதிமன்றம் ஆணை பிறப்பித்த நிலையில் 2012ஆம் ஆண்டு முதல் லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் ஜூலியன் அசாஞ்சே தஞ்சமடைந்தார். சர்வதேச நாடுகளின் விதிமுறைப்படி, தஞ்சம் அளித்துள்ள நாட்டின் தூதரகத்துக்குள் காவல்துறையினர் சென்று யாரையும் கைது செய்ய முடியாது. எனவே தூதரகத்துக்கு உள்ளேயே தொடர்ச்சியாக காலம் கழித்து வந்தார் அசாஞ்சே.
அமெரிக்கா மீது அச்சம்
ஸ்வீடன் நாட்டில் இவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட பாலியல் புகார் திரும்பப் பெறப்பட்ட போதிலும், தன்னை கைது செய்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சிய, அசாஞ்சே, தொடர்ந்து ஈக்வடார் நாட்டின் தூதரகத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் ஈக்குவடார் நாடு ஜூலியன் அசாஞ்சேவிற்கு அளித்துவந்த அரசியல் பாதுகாப்பை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளது.
|
அதிபர் அறிவிப்பு
ஈக்குவடார் நாட்டின் அதிபர் லெனின் மொரேனோ, தனது முடிவை இன்று ட்விட்டரில் அறிவித்திருந்தார். அதில், ஜூலியன் அசாஞ்சேக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை ஈகுவடார் விலகிக் கொள்கிறது. தொடர்ச்சியாக சர்வதேச ஒப்பந்தங்களை மீறி அவர் செயல்பட்டு வருவது உறுதியானதால் இந்த முடிவை எடுத்துள்ளது, என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த தகவல் லண்டன் காவல்துறைக்கும் தெரிவிக்கப்பட்டது.
|
கைது செய்யப்பட்டார் அசாஞ்சே
தகவல் அறிந்ததும், மெட்ரோபொலிட்டன் போலீஸ் சர்வீஸ் காவல்துறையினர், ஈக்வடார் நாட்டு தூதரகத்திற்குள்ளேயே, இன்று சென்று, ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்துள்ளனர். மத்திய லண்டன் போலீஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார் அவர். வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
மரண தண்டனை கூடாது
ஈக்வடார் அதிபர் லெனின் மொரேனோவின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விவரங்களை அசாஞ்சே சமீபத்தில் வெளியிட்டதாகவும், எனவே தான் அந்த நாடு வரை இவரை கைவிட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, அசாஞ்சேவை துன்புறுத்துதல் அல்லது மரண தண்டனை விதிக்கக்கூடிய நாடு எதுவாக இருந்தாலும் அங்கு, அனுப்பி வைக்கக் கூடாது என்று பிரிட்டனை தான் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார் லெனின் மொரேனோ.
பிரிட்டிஷ் அரசாங்கம் தங்கள் நாட்டின் விதிமுறைப்படிதான் விசாரணை நடைபெறும் என்று உறுதியளித்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
|
சர்வதேச விதிமுறைக்கு எதிரானது
இதனிடையே விக்கிலீக்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "அவசரம்.. ஈக்குவடார் சட்டவிரோதமாக அசாஞ்சேவுக்கு அளித்த அரசியல் பாதுகாப்பை விலக்கியுள்ளது. இது சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரானது. சில நிமிடங்களுக்கு முன்பாக அசாஞ்சே பிரிட்டிஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாஞ்சே கைது செய்யப்பட்டுள்ள இந்த விவகாரம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.