உலக நாடுகளை அலறவிடும் ஓமிக்ரான்.. பிரிட்டன் நாட்டில் மட்டும் 160 பேருக்கு பாதிப்பு.. அடுத்து என்ன?
லண்டன்: பிரிட்டன் நாட்டில் சுமார் 160 பேருக்கு ஒமிக்ரான் உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளைப் பிரிட்டன் தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த 2019 இறுதியில் சீனாவில் கண்டறிய கொரோனா வைரஸ் உலகையே புரட்டிப் போட்டுள்ளது. அமெரிக்கா தொடங்கி ஆப்பிரிக்கா வரை அனைத்து நாடுகளும் கொரோனா வைரசால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன.
மிக குறைந்த காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வேக்சின், கொரோனா பரவலை வெகுவாக குறைத்தது. கடந்த சில மாதங்களாகவே உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பாதிப்பு குறைந்தே வந்தது.
தலைநகரில் பதற்றம்.. டெல்லியில் ஒருவருக்கு ஓமிக்ரான் கொரோனா.. இந்தியாவில் இதுவரை 5 பேருக்கு உறுதி
ஓமிக்ரான் வைரஸ்
இந்தச் சூழலில் தான் கடந்த நவ. 25ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இது உலக நாடுகள் மத்தியில் அடுத்த அலை குறித்த அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் பல்வேறு நாடுகளும் விமான போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்தன. இருப்பினும், இது பெரியளவில் பலன் தந்ததாகத் தெரியவில்லை. இதுவரை சமீபத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்கனவே பரவிவிட்டது. இந்தியாவில் இதுவரை 4 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
160 பேருக்கு ஓமிக்ரான்
பிரிட்டனும் தென் ஆப்பிரிக்கா உடனான விமான போக்குவரத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இருப்பினும், ஓமிக்ரான் அதற்கெல்லாம் கட்டுப்பட்டதாகத் தெரியவில்லை. அங்கு இதுவரை 160 பேருக்கு ஓமிக்ரான் உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாகப் பிரிட்டன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
போரிஸ் ஜான்சன்
இது தொடர்பாகப் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசுகையில், "ஓமிக்ரான் உருமாறிய கொரோனாவின் பரவலைக் குறைக்கவே தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நமது ஆய்வாளர்கள் ஓமிக்ரான் எப்படிப் பரவுகிறது? வேக்சின்களுக்கு எதிராக எந்தளவு வேலை செய்கிறது? என்பது குறித்துக் கண்டறிய ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். அதைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
பிரிட்டன் சுகாதார அமைச்சர்
அதேபோல அந்நாட்டின் சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித் கூறுகையில், "ஓமிக்ரான் கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து அது குறித்த தரவுகளை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். பயணங்கள் தொடர்புடைய வழக்குகள் தான் கொரோனா கேஸ்களை அதிகரிக்கின்றன. இருக்கும் நிலைமைக்கு ஏற்றபடி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதனால்தான் சர்வதேச விமான போக்குவரத்தில் சில புதிய கட்டுப்பாடுகளை நாங்கள் அறிவித்துள்ளோம்" என்றார்.
புதிய கட்டுப்பாடுகள்
பிரிட்டனில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதிகளின்படி, பிரிட்டன் வரும் சர்வதேச பயணிகள் விமானம் புறப்படுவதற்கு 48 மணி நேரம் முன்பு எடுத்த கொரோனா நெகடிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஓமிக்ரான் கொரோனா மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டிருக்கலாம் என்று கூறப்படுவதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பிரிட்டன் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது..
ரெட் லிஸ்ட்
இருப்பினும், இந்த முடிவுக்குப் பிரிட்டன் விமான நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பிரிட்டன் அரசின் இந்த முடிவு விமான பயணங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் உள்ளதாக விமர்சித்துள்ளன. பிரிட்டன் அரசு இது தொடர்பான தனது முடிவை வரும் டிசம்பர் 20ஆம் தேதி மீண்டும் மறுபரிசீலனை செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட 10 ஆப்பிரிக்க நாடுகளைப் பிரிட்டன் ரெட் லிஸ்ட் பட்டியலில் சேர்த்துள்ளது. அதாவது இந்த ரெட் லிஸ்ட் நாடுகளில் இருந்து வரும் பிரிட்டன் நாட்டவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். அவர்களும் கூட 15 நாட்கள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.