ஒத்த கை.. தலைகீழா நின்ற பெண்.. இடையில் ஓடிய நாய்.. நிச்சயம் இந்த டிவிஸ்ட எதிர்பார்த்திருக்கமாட்டீங்க
லண்டன்: ஒற்றைக் கையில் தலைக்கீழாக நிற்பது போல் வீடியோ எடுத்து ஏமாற்ற நினைத்த பெண்ணை, அவரது நாயே காட்டிக் கொடுத்த வேடிக்கையான சம்பவம் வைரலாகியுள்ளது.
கொரோனா ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் மக்கள், எதையாவது செய்து பொழுதை கழித்துக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலானவர்களுக்கு ஸ்மார்ட் போன் தான் கை கொடுத்து உதவுகிறது.
ஸ்மார்ட் போனில் உள்ள கேமராவை வைத்து கண்ணில் படுவதை எல்லாம் வீடியோ எடுத்து நெட்டில் அப்லோட் செய்து விடுகின்றனர். அதில் பல வீடியோக்கள் வைரலாகி உலகம் முழுவதும் சுற்றி வந்துவிடுகிறது.
அப்படித்தான் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி இருக்கிறது. அந்த வீடியோவில் பெண் ஒருவர் சுவரில் சாய்ந்த படி தலைகீழாக நிற்கிறார். அவரது அருகில் முதியவர் ஒருவர் சேரில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருக்கிறார்.
முதலில் இரண்டு கைகளில் தலைக்கீழாக நிற்கும் அந்த பெண், பின்னர் கஷ்டப்பட்டு முயன்று ஒரு கையை மட்டும் தரையில் வைத்தப்படி தலைக்கீழாக நிற்கிறார். 'ச்சே... எப்டிங்க உங்களால மட்டும் இது முடியுது'ன்னு நம்ம மைண்ட் வாய்ஸ் வெளியில் கேட்கும்படி யோசித்து கொண்டிருக்கும் சமயத்தில், சூப்பரான டிவிஸ்ட் ஒன்றை ஏற்படுத்துகிறது அவர்கள் வீட்டு செல்ல நாய்.
திடீரென சுவரில் மேலிருந்து கீழ் நோக்கி ஓடி வந்து, இருவருக்கும் நடுவே, அந்தரத்தில் நின்று மைடியர் குட்டி சாத்தான் படம் பார்த்த திகில் உணர்வைத் தருகிறது அந்த நாய். 'இது இப்டி சாத்தியம்' என நாம் அதிர்ச்சியாகும் போது தான் தெரிகிறது இதுவரை நாம் பார்த்தது எல்லாமே போலி என்பது.
அந்தப் பெண் தரையில் படுத்தபடி, கேமரா கோணத்தை மட்டும் பக்காவாக செட் செய்து வீடியோ எடுத்து ஏமாற்ற பார்த்திருக்கிறார். ஆனால் பாவம் தனது திட்டத்தை வீடியோவில் வரும் தாத்தாவிற்கு சொன்ன பெண், அந்த நாயிடம் சொல்லவில்லை போலும். அதனால் தான் அந்த நாய் குறுக்கே ஓடி வந்து கெடுத்துவிட்டது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலோ வைரலாகி இருக்கிறது. 54 லட்சம் பார்வைகளைக் கடந்து, 2 லட்சம் ஷேர்களை கடந்து, 10 ஆயிரம் லைக்குகளை கடந்து சென்று கொண்டிருக்கிறது இந்த வீடியோ. எல்லாமே இந்த நாயின் டிவிஸ்ட்டினால் தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.