கொரோனா காலத்தில் சேவை... ஸ்டார்ஸ் ஆப் கோவிட்... World Humanitarian Drive அமைப்பு கவுரவிப்பு
லண்டன்: லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் World Humanitarian Drive (வேர்ல்ட் ஹுமானிட்டேரியென் டிரைவ் WHD) என்ற சர்வதேச அமைப்பு சார்பில் கொரோனா காலத்தில் சேவையாற்றிய 100 பேர் கவுரவிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் தேர்வு செய்யப்பட்ட 100 நபர்களில் தமிழகத்தில் இருந்து விஜய் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்., பாலகிருஷ்ணா ஐ.பி.எஸ்., இளம் மருத்துவர் ஹக்கீம் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.
காணொலி மூலம் நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்ச்சியில் கொசோவா நாட்டின் முன்னாள் அதிபர் மற்றும் நேபாள் முன்னாள் பிரதமர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் மேலும் 3940 பேருக்கு கொரோனா.. 54 பேர் மரணம்.. . மதுரையில் மோசமான பாதிப்பு
மக்கள் தொண்டு
கொரோனா காலத்தில் சேவையாற்றிய மகத்தான மனிதர்களை பாராட்டும் பொருட்டு ஸ்டார்ஸ் ஆப் கோவிட் என்ற நிகழ்ச்சி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. மனிதம் போற்றும் உயரியவர்களை கவுரவிக்கவேண்டும் என்ற நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுக்கு 34-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 1600 பெயர்கள் பரிந்துரைக்கு சென்றிருந்தன. அதில் 100 நபர்களை மட்டும் அடையாளம் கண்டு அவர்களை கவுரவித்துள்ளது World Humanitarian Drive அமைப்பு.
முன்னாள் பிரதமர்
World Humanitarian Drive அமைப்பின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள லண்டனில் இருந்தவாறு இந்த நிகழ்ச்சி காணொலி மூலம் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினர்களாக நேபாள் நாட்டின் முன்னாள் பிரதமர் மாதவ்குமார், கொசோவா நாட்டின் முன்னாள் அதிபர் ஃபத்மீர் சேஜ்டியூ, ஆகியோர் கலந்துகொண்டு மக்கள் தொண்டாற்றிய மகத்தான 100 மனிதர்களை பாராட்டி பேசி அவர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்தனர். மேலும், வேர்ல்ட் ஹுமானிட்டேரியென் டிரைவ் அமைப்பின் தலைவர் அப்துல் பாசித் சையத் எழுதிய "STARS OF COVID" மற்றும் "RE ENGINEERING HAPPINESS" ஆகிய இரு நூல்களையும் அவர்கள் வெளியிட்டனர்.
34 நாடுகள்
மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், நிர்வாக சேவைகள், கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம், மருத்துவத்துறை, அறக்கட்டளை/தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர், சுற்றுச்சூழல் இயற்கை பாதுகாப்பு உள்ளிட்ட பன்னிரண்டு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த பிரிவுகளின் கீழ் 34 நாடுகளை சேர்ந்தோருக்கு அவர்கள் ஆற்றிய சேவைகள், தொண்டுகளின் அடிப்படையில் விருதுகள் அளிக்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் இருந்து
இதில் மக்கள் பிரதிநிதிகள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த நவாஸ் கனி எம்.பிக்கும், அரசு அதிகாரிகள் மற்றும் நிர்வாக சேவை பிரிவில் விஜய் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்., பாலகிருஷ்ணா ஐ.பி.எஸ்.ஆகியோருக்கும், மருத்துவத்துறை சார்பில் திருச்சியை சேர்ந்த இளம் மருத்துவர் ஹக்கீம் என்பவருக்கும் விருதுகள் அளிக்கப்பட்டன. இதில் ஹக்கீம் என்பவர், காது கேளாதோர் வாய் பேச முடியாதவர்களுக்கு பிரத்தியேகமாக முகக்கவசம் வடிவமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.