ஹலோ போலீஸா.. எனக்கு கல்யாணம்.. தடுத்து நிறுத்துங்க.. ஸ்கூலுக்கு போகணும்.. 11 வயது சிறுமியின் அதிரடி
தன் திருமணத்தை தானே தடுத்து நிறுத்தி இருக்கிறாள் 11 வயது சிறுமி
லக்னோ: "ஹலோ போலீஸா.. எனக்கு கல்யாணம், சீக்கிரமா கிளம்பி வாங்க.. நான் ஸ்கூலுக்கு போகணும்" என்று தன் கல்யாணத்தை தானே நிறுத்தி இருக்கிறாள் 11 வயது சிறுமி ஒருத்தி!
எவ்வளவுதான் சட்டங்கள் போட்டாலும், விழிப்புணர்வு ஏற்டுத்தினாலும் பல மாநிலங்களின் கிராமப்புறங்களில் இன்னமும் குழந்தை திருமணங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதிலும் உத்தரப்பிரதேசத்தில் இந்த கொடுமை அதிகம்.
உன்னாவே மாவட்டம் பிகாபூரை சேர்ந்தவர் சூரஜ்பன் நிஷாத். இவருக்கு 11 வயதில் லட்சுமி தேவி என்ற மகள் இருக்கிறாள். 6-ம் வகுப்பு படிக்கிறாள். இவளுக்கு வீட்டில் திடீரென கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தனர். மாப்பிள்ளைக்கு வயது 28... வரும் 10-ம் தேதி கல்யாணத்துக்கு நாள் குறித்தனர்!
ஆனால் லட்சுமிக்கோ கல்யாணத்தில் கொஞ்சமும் இஷ்டம் இல்லை.. நன்றாக படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.. இந்த விருப்பத்தை வீட்டிலும் சொன்னாள்.. ஆனால் பெற்றோர் அதை காது கொடுத்து கேட்கவில்லை.. கல்யாண ஏற்பாடுகளும் தயார் ஆனது.. இதை பார்த்து பயந்துபோன லட்சுமி, போலீசுக்கு போன் பண்ணினாள்.. 112 என்ற உதவி எண்ணை அழைத்து, தனக்கு கல்யாணம் என்றும், பிடிக்காமலேயே இதற்கு ஏற்பாடு நடக்கிறது, எனக்கு படிக்கணும்னு ஆசை என்று சொன்னாள்.
"பொட்டு தங்கம் இல்லை.. எல்லாத்தையும்தான் தந்துட்டேனே"... கையை விரித்த முருகன்.. விசாரணையில் ஷாக்!
இதையடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகளும், போலீசாரும் விரைந்து வந்தனர்.. லட்சுமியின் கல்யாணத்தை நிறுத்தும்படி அவரது தந்தைக்கு அறிவுரை சொன்னார்கள்.. பிள்ளையை தொடர்ந்து படிக்க வைக்கவும் கேட்டுக் கொண்டனர். கடைசியாக அவரது அப்பா இதனை ஏற்றுக்கொண்டாராம்.. லட்சுமி கல்யாணமும் நின்று போயிற்று.. இப்போது அவள் நிம்மதியாக ஸ்கூலுக்கு போய் வருகிறாள்.
அது மட்டுமில்லை.. லட்சுமியை ஒழுங்காக ஸ்கூலுக்கு அனுப்புகிறார்களா, அவளும் பத்திரமாக ஸ்கூலுக்கு போய் வருகிறாளா என்பதை கண்காணிக்க ஒரு போலீஸ்காரரும் நியமிக்கப்பட்டுள்ளாராம். போலீசுக்கு போன் செய்து சொல்லி... படிப்புக்காக.. தன் கல்யாணத்தை, தானே நிறுத்தி உள்ள சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.. ஊரெல்லாம் இந்த "லட்சுமி கல்யாணம்" பத்தின பேச்சுதான்!