பெஞ்சில் உட்காருவதில் தகராறு ...பள்ளி வகுப்பறையில்... 10-ம் வகுப்பு மாணவனை சுட்டுக்கொன்ற சக மாணவன்!
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் பள்ளி வகுப்பறையில் சக மாணவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற 10-ம் வகுப்பு மாணவரை போலீசார் கைது செய்தனர்.
பெஞ்சில் உட்காருவது தொடர்பாக அந்த இரு மாணவர்களும் சண்டை போட்டுள்ளனர். இந்த சாதாரண சண்டை மிகப்பெரிய கொலையில் போய் முடிந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வரும் 14 வயதுடைய இரண்டு மாணவர்கள் பெஞ்சில் உட்காருவதில் தொடர்பாக கடந்த புதன்கிழமை சண்டை போட்டனர். பின்னர் இருவரும் மாலையில் வீட்டுக்கு திரும்பி விட்டனர். ஆனால் அதில் ஒரு மாணவர் அந்த சண்டையை இன்று காலை வரை மனதில் வைத்து இருந்தார். தன்னுடன் சண்டையிட்ட சக மாணவரை கொலை செய்ய திட்டமிட்ட அவர் தனது வீட்டில் இருந்த துப்பாக்கியை புத்தக பையில் மறைத்து வைத்து பள்ளி கூடத்துக்கு எடுத்து சென்றார்.
தொடர்ந்து தீராத ஆத்திரத்தில் இருந்த அந்த மாணவர், தன்னுடன் சண்டையிட்ட மாணவரை வகுப்பறையில் வைத்து 3 முறை துப்பாக்கியால் சுட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதில் தலை, மார்பு மற்றும் வயிற்று பகுதியில் குண்டு பாய்ந்த அந்த மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே துப்பாக்கியால் சுட்ட மாணவர் அங்கு இருந்து தப்பி செல்ல முயன்றார். சக மாணவர்கள், ஆசிரியர்கள் அவரை பிடிக்க முயன்றபோது வானம் நோக்கி துப்பாக்கியால் சுட்டு அவர்களை மிரட்டினார். ஆனாலும் ஆசிரியர்கள் அந்த மாணவரை மடக்கி பிடித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் துப்பாக்கியால் சுட்ட மாணவரை கைது செய்தனர். அவர் வைத்து இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், அவரது பையில் மற்றோரு நாட்டு துப்பாக்கி இருப்பதையும் கண்டுபிடித்தனர். அந்த மாணவரின் மாமா ராணுவத்தில் பணிபுரிகிறார். அப்போது அவர் விடுமுறையில் வீட்டுக்கு வந்துளளதால், மாணவர் அவரின் துப்பாக்கியை எடுத்து வந்து இந்த படுபாதக செயலை அரங்கேற்றி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.