2022 சட்டமன்ற தேர்தல்.. உ.பி யில் பிரியங்காவை முதல்வர் வேட்பாளராக களமிறக்க வலுக்கும் கோரிக்கை
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தியை முதல்வர் வேட்பாளராக நிறுத்த, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
2022-ம் ஆண்டு நடைபெற உள்ள உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில், பிரியங்கா காந்தியை முன்னிறுத்தி களம் காண வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். ஏற்கனவே கிழக்கு உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளராக, மக்கள் மத்தியில் பிரியங்கா காந்தி பிரபலமாகியுள்ளதை அடுத்து அவர்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.
எனினும் இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுப்பது சோனியா காந்தி குடும்பத்தினரின் கையில் தான் உள்ளது என மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியுள்ளனர். மேலும் காங்கிரஸ் கட்சியில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்வதை தாங்கள் விரும்பிவில்லை என்றும், எது நடந்தாலும் ராகுல் காந்தியே காங்கிரஸ் தலைவராக தொடர வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
சென்னையில் உச்சத்தை எட்டும் தண்ணீர் பஞ்சம்.. சமைக்க நீர் இல்லாததால் மூடப்படும் உணவகங்கள்!
உத்தரப்பிரதேசத்தில் விரைவில் சில சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் எப்படியாவது வென்றே தீர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைமை தீவிரம் காட்டி வருகிறது.
இந்த இடைத்தேர்தல்கள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ள மாநில காங்கிரஸ் கட்சியின் பல மூத்த உறுப்பினர்கள், காலியாக உள்ள 12 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் யாருடனும் கூட்டணி சேராமல் காங்கிரஸ் தனித்து செயல்பட்டு, வெற்றி பெற வேண்டும். இதன் மூலம் மக்களிடையே செல்வாக்கு உள்ளதை நிரூபித்தாக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி குறித்து பிரியங்கா கூறிய கருத்துகள் அவர் மீதான நற்பெயரை மேலும் கூட்டியுள்ளதாக கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் இது பற்றி கருத்து தெரிவித்துள்ள கட்சி நிர்வாகிகள் சிலர், உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் மட்டுமே காங்கிரஸின் முழுபலமும் வெளிப்படும். அப்போது தான் 2022 சட்டமன்ற தேர்தலை நாங்கள் நம்பிக்கையுடன் எதிர் கொள்ள முடியும்.
எனினும் தங்களது இந்த கோரிக்கைக்கு பிரியங்கா மற்றும் கட்சித் தலைமையிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. ஆனால் எங்கள் கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தியே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என நம்புவதாக கூறியுள்ளனர்.