ஹாத்ராஸ் போன்று இன்னொரு கொடூரம்.. மயக்க ஊசி போட்டு 22 வயது பெண் பலாத்காரம் செய்து கொலை
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் அருகே மயக்க ஊசி போட்டு 22 வயது தலித் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாத்ராஸில் கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி தலித் பெண் ஒருவர் 4 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் நாடே அதிர்ச்சியில் உள்ளது. இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் இன்னொரு பலாத்காரம் நடந்துள்ளது.
ஹாத்ராஸில் இருந்து 500 கி.மீ. தொலைவில் உள்ள பல்ராம்பூர். இந்த பகுதியை சேர்ந்தவர் 22 வயது பெண். இவர் தினந்தோறும் காலையில் வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடுதிரும்புவது வழக்கம்.
கெஞ்சிய பெற்றோர்.. கண்டுகொள்ளாத போலீஸ்.. பலாத்காரம் செய்யப்பட்ட பெண் உடல் இரவோடு தகனம்.. உ.பி. ஷாக்
மர்ம கும்பல்
இந்த நிலையில் நேற்று பணிக்கு சென்றவர் மாலை நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து அவரை காணவில்லை என போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதனிடையே அந்த பெண்ணை மர்ம கும்பல் கடத்திச் சென்றது.
பலாத்காரம்
பின்னர் அந்த பெண்ணுக்கு மயக்க மருந்தை ஊசி மூலம் ஏற்றி அவரை இருவரும் பலாத்காரம் செய்துவிட்டு இரவு 7 மணிக்கு ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் ஏற்றி அந்த பெண்ணின் வீட்டுக்கு அனுப்பினர். வீட்டுக்கு வந்த பெண் அங்கு தனது தாயிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.
கை,கால்கள் முறிவு
இதையடுத்து அந்த பெண்ணை உள்ளூரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த பெண்ணின் முதுகெலும்பை உடைத்த மர்ம நபர்கள், கைகால்களையும் முறித்தனர். அந்த பெண்ணால் நிற்கவே முடியவில்லை என அவரது தாய் கதறினார்.
சிகிச்சை பலனின்றி பலி
மிகவும் மோசமான நிலையில் இருந்த அந்த பெண்ணை லக்னோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதையடுத்து மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துவிட்டார். வீட்டுக்கு வந்த அந்த பெண் என்னை காப்பாற்றுங்கள், நான் சாகக் கூடாது என அழுதார். ஆனால் சிகிச்சை அளிப்பதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார் என அந்த பெண்ணின் தாயார் கண்ணீர் விட்டார்.
கைது
பிரேத பரிசோதனையில் அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததாகவும் அறிக்கை கூறுகிறது. இந்த சம்பவத்தில் போலீஸார் இருவரை கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் சிறுவனாவார்.