Migrant Workers: உ.பி.யில் இரு லாரிகள் மோதல்.. புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் பலி.. தொடரும் துயரம்
லக்னோ: உத்தரப்பிரதேசம் அருகே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயணம் செய்த லாரி, நின்றுக் கொண்டிருந்த மற்றொரு லாரி மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் 24 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் ஃபரீதாபாத்திலிருந்து கோரக்பூருக்கு சென்று கொண்டிருந்தனர்.
ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலமும், லாரிகள் மூலமும் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 81 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஃபரீதாபாத்திலிருந்து கோரக்பூருக்கு லாரி மூலம் புறப்பட்டனர்.
15 பேர் கவலைக்கிடம்
அப்போது இன்று அதிகாலை 3.30 மணிக்கு கோட்வாலி காவல் எல்லைக்குள்பட்ட மிஹாலி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லாரி வந்த போது அங்கு நின்றுக் கொண்டிருந்த மற்றொரு லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 24 பேர் பலியாகிவிட்டனர். 20 பேர் காயமடைந்துள்ளனர்.
|
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
அவர்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். இவர்களில் 15 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர்.
|
17 பேர் பலி
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி உயிர் விடுவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த வாரம் மகாராஷ்டிராவில் இருந்து மத்திய பிரதேச மாநிலத்திற்கு ரயில் தண்டவாளத்தில் சென்ற போது அசதியால் அங்கேயே படுத்துறங்கிய 17 புலம்பெயர் தொழிலாளர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.
மனு தள்ளுபடி
"சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தடுத்து நிறுத்துவது யாராலும் இயலாத ஒன்று" என உச்சநீதிமன்ற அமர்வு நேற்று தெரிவித்தது. அது போல் அவர்களுக்கு தங்குவதற்கு இடமோ அல்லது இலவச போக்குவரத்தோ கொடுக்குமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுத்து தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.