"மயக்க மருந்து" ஓடும் ரயிலில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்.. டிக்கெட் பரிசோதகர் செய்த கொடுமை!
லக்னோ: கடந்த சில நாள்களுக்கு முன்பு உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து டெல்லி செல்லும் சத்பாவனா விரைவு ரயிலில் 27 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரயில்வே ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். தற்போது மீண்டும் அதேபோன்ற சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள சந்தவுசி ரயில் நிலையத்தில் இரவு நேரத்தில் 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தனது 2 வயது மகனுடன் பிரயாக்ராஜில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக வந்துள்ளார்.
இந்த பயணத்திற்காக அந்த பெண் முன்பதிவு செய்யாத நிலையில், பொதுப் பெட்டியில் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பொதுப்பெட்டியில் தனது 2 வயது குழந்தையுடன் பயணத்தை தொடங்கியுள்ளார்.
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம்..பிப்.15ல் திறந்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின்..சிஎம்டிஏ உறுதி
டிக்கெட் பரிசோதகர்
இந்த நிலையில் அந்தப் பெண்ணுக்கு தெரிந்த ராஜு சிங் என்ற டிக்கெட் பரிசோதகர் ரயிலுக்கு வந்துள்ளார். அந்த பெண்ணிடம் பேசிய டிக்கெட் பரிசோதகர் ராஜு சிங், ஏன் தனியாக பொதுப்பெட்டியில் ஏறுகிறாய், அதில் அமர இடம்கூட கிடைக்காது. என்னுடன் வா, ஏசி பெட்டியில் இடம் ஏற்பாடு செய்து தருகிறேன்' என்று கூறி தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.
மயக்க மருந்து
டிக்கெட் பரிசோதகர் ராஜு சிங்கை அந்தப் பெண்ணுக்கு நான்கு ஆண்டுகளாக தெரியும் என்று கூறப்படுகிறது. இதனால் அவர் அழைத்ததால் அந்தப் பெண் ராஜு சிங்குடன் சென்றுள்ளார். ஏசி பெட்டிக்கு சென்ற சிறிது நேரத்தில், இரவு 10 மணியளவில் ராஜு சிங்கும் அவரது மற்றொரு நண்பரும் அங்கு வந்து, தங்களிடமிருந்த தண்ணீரை அந்தப் பெண்ணிடம் கொடுத்துள்ளனனர்.
பெண் பாலியல் வன்கொடுமை
அந்தப் பெண்ணும் தண்ணீரை குடிக்க, சிறிது நேரத்தில் அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணுடன் தூங்கிய அவரது 2 வயது மகனை அடுத்த படுக்கைக்கு மாற்றிவிட்டு இரண்டு பேரும் சேர்ந்து அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ராஜ்காட் முதல் அலிகார் ரயில் நிலையம் வரை இந்த சம்பவம் நடந்துள்ளது.
கணவரின் உதவியுடன் புகார்
இதன் பின்னர் மறுநாள் காலையில் செல்லவேண்டிய இடத்திற்கு சென்ற அந்தப் பெண், இந்த நடந்த சம்பவம் குறித்து யாரிடமும் கூறவில்லை. பின்னர் மீண்டும் வீடு திரும்பிய பின், ரயிலில் நடந்த சம்பவம் குறித்து தனது கணவரிடம் கூறியுள்ளார். பின்னர், இதுகுறித்து ரயில்வே ஹெல்ப்லைன் மூலம் புகார் செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம்
பின்னர் ரெயில்வே டிக்கெட் பரிசோதகருக்கு எதிராக எழுத்து மூலமும் புகார் செய்தனர். தொடர்ந்து, ரயில்வே போலீஸ் எஸ்பி அபர்னா குப்தா பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றார். அந்த வாக்குமூலத்தில், மயக்க நிலையில் இருந்ததால் தன்னால் ஏதும் செய்ய முடியவில்லை என்று கூறியுள்ளார்.
ராஜு சிங் கைது
அதன் அடிப்படையில் ரயில்வே போலீசார் ராஜு சிங் வீட்டில் சோதனை செய்து அவரை கைது செய்தனர். அதுமட்டுமல்லாமல் உடனடியாக ராஜு சிங் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதேவேளையில், மற்றொரு நபரை பெண்ணால் அடையாளம் காண முடியவில்லை. அந்த நபரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ரயிலில் டிக்கெட் பரிசோதகரே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.