ராமரின் நாம் வாழ்க.. முழக்கமிட்டபடி இந்து பெண்ணுக்கு இறுதி சடங்கு செய்த இஸ்லாமியர்கள்.. வாரணாசியில்
லக்னோ: மலேரியா நோயால் பாதிக்கப்பட்ட இந்து சிறுமியின் இறுதி சடங்கை இஸ்லாமியார்கள் முன்னின்று நடத்தி வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது. அப்போது அவர்கள் இறுதி சடங்கின் மத வழக்கப்படி ராமரின் பெயரையும் உச்சரித்து இறுதி சடங்கை செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஹர்குவா தீக் என்ற பகுதியை சேர்ந்த 19 வயது பெண் சோனி. இவர் மலேரியா மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார்.
இந்நிலையில் சோனியின் தந்தை கரில்லா விஸ்வர்கமா சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். அவரது தாயார் இருதய நோயாளி. சோனியின் சகோதரர் ஒருவர் கொண்டு வரும் வருமானத்தை வைத்து தான் குடும்பம் நடந்து வந்துள்ளது. இந்நிலையில் சோனி இறந்துவிட்ட நிலையில் இறுதி சடங்கு நடத்த கூட பணம் இல்லாமல் அந்த குடும்பம் வறுமையால் அவதிப்பட்டது.
இதையடுத்து சோனியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் இஸ்லாமியர் ஒருவர் சோனியின் வீட்டுக்கு வந்து அவரது குடும்பததினரிடம் வந்து நாங்கள் இறுதி சடங்கை பார்த்துக்கொள்கிறோம் தைரியமாக இருங்கள் என்று ஆறுதல் கூறி அதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள். இதன்படி பக்கத்து வீட்டு இஸ்லாமியர்கள் சிலர் பணம் கொடுத்து சோனியின் இறுதி சடங்கு ஏற்பாடுகளை செய்தனர்.
பின்னர் தலையில் குல்லா அணிந்த படி சோனியின் சகோதரருடன் இணைந்து சோனியின் உடலை தூக்கிக்கொண்டு மயானத்திற்கு சென்றனர். அதோடு, இந்து மதத்தில் பின்பற்றப்படும் சடங்குகளை செய்ததோடு "ராம் நாம் சத்யாஹை" என்று கூறியவாறே அந்த பெண்ணை தூக்கி சென்றனர். பின்னர் உடல் தகனம் செய்யப்பட்டது.
இது குறித்து இறுதி சடங்கு செய்தவர்களில் ஒருவரான ஷகீல் கூறுகையில், இறுதியில் நாம் அங்குதான் செல்லப்போகிறோம் என்தே உண்மை. ஆனால் நாம் சின்னசின்ன விஷங்களுக்காக சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறோம் என்றார். மதவேறுபாடுகளைக் கடந்து நடந்த இந்து பெண்ணின் இறுதிச்சடங்கு பல்வேறு தரப்பினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.